2016-11-14 16:56:00

அழிந்துபோகும் பொருட்களில் நம்பிக்கை வேண்டாம்


நவ.,14,2016. மனிதனால் கட்டப்பட்டவை எவ்வளவுப் பெரியனவைகளாக இருந்தாலும் அவை ஒரு நாள் அழிந்துபோகும், ஆகவே உலகப் பொருட்கள் மீது உங்கள் முழு நம்பிக்கையையும் வைக்கவேண்டாம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக, ஏழைகள் மற்றும் வீடற்றோருக்கான சிறப்புத் திருப்பலியை அவர்களுடன் இஞ்ஞாயிறு நிறைவேற்றியபின் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலையானவை என நம்மால் நம்பப்பட்டவைகள் நிலையற்றுப்போனதையும், தீர்க்க முடியாத பிரச்னைகள் என அச்சுறுத்தியவை தீர்வைக் கண்டதையும் நாம் கண்டுள்ளோம், ஆகவே, போர்களையும், புரட்சிகளையும் அழிவுகளையும் கண்டு கலங்க வேண்டாம், ஏனெனில் அவைகளும் வாழ்வின் உண்மை நிலைகளின் ஒரு பகுதியே என எடுத்துரைத்தார்.

நீங்கள் ஏமாந்துபோகாதபடிக்கு கவனமாயிருங்கள், ஏனெனில் மெசியா என சொல்லிக்கொண்டு போலி மெசியாக்கள் பலர் வருவர் எனவும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித பாதுகாப்பு குறித்த அக்கறையை வைத்து சூதாட்டம் ஆடுவோர், அல்லது அதை வைத்து பொய்யாக சம்பாதிக்க விரும்புவோர் எப்போதும் உள்ளனர் என்பதை இயேசு அறிந்தேயிருந்தார் எனவும் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.