2016-11-02 15:19:00

இது இரக்கத்தின் காலம் – தீர்ப்பை இறைவனிடமே விட்டுவிடுவோம்


ஓர் ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தபோது, பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்துபோன அவர்கள், பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. பெருமழையும் பெய்தது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவர், ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான், கடவுள், இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால், மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னார். அந்தப் பாவியை அடையாளம் கண்டு கொள்ளும் நோக்கத்துடன், அனைவரும், தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு, தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று. பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது. மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவோம்” என்று கத்திக்கொண்டே, அவர் மேல் பாய்ந்தனர். அந்த விவசாயி, கெஞ்சிக் கதறி, தான் அப்பாவி என்று மன்றாடினார். மற்றவர் யாரும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவரை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அவர் கதறிக்கொண்டே மழையில் ஒடினார். அப்போது, மிகப்பெரும் ஒரு மின்னல் தாக்கி, இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி, அதிர்ச்சியில் உறைந்து, மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தார். இடி விழுந்து, நொறுங்கிக் கிடந்தது மண்டபம். ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் அதுவரை தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும், அவரை பாவி என்று வெளியே தள்ளியதால், தங்கள் பாதுகாப்பை இழந்தனர்.

சட்டத்தை  நம் கையிலெடுக்க வேண்டாம். தீர்ப்புக்களை இறைவனிடமே விட்டுவிடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.