2016-11-02 15:29:00

அரசுப் பள்ளியில் ஆயிரம் மரங்கள் – மாணவர்களின் சாதனை


நவ.02,2016. அரசுப் பள்ளியில் 1000 மரங்களை நட்டு வளர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முதன்மை எடுத்துக்காட்டாக மாணவர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி என்றாலே பாராமரிப்பற்ற கட்டடங்களும், அடிப்படை வசதியில்லாமல், போதிய மரங்கள் இன்றி வெயிலின் தாக்கத்தினால் மாணவர்கள் அவதியடைந்து வருவதாகவே சில மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

ஆனால், போடி அருகே, சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைந்தால் இந்த கருத்து பொய் என்பதை உணர்ந்து கொள்வர். அந்த அளவிற்கு இயற்கை எழில் மிக்க சோலை வனத்திற்குள் நுழைவது போல் பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் புங்கை, வேம்பு, ஆலமரம், தேக்கு என 1000 மரங்களை மாணவர்கள் வளர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முதன்மை எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து, ‘தி இந்து’நாளிதழிடம் பள்ளியின் வேளாண்மை ஆசிரியர் பி.மகேந்திரன் கூறுகையில், இது அரசு உயர்நிலைப்பள்ளியாக கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2002-ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டுள்ளதோடு, 900 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி கட்டப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்டு காலக்கட்டத்தில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினர். இதன் காரணமாக பல்வேறு வகை மரங்கள் வனத்துறையினரிடம் இருந்து பெறப்பட்டு, பள்ளி விளையாட்டு மைதானம் தவிர, மற்ற அனைத்து இடங்களில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் வசதியில்லாமல் மழையினை நம்பி இப்பகுதியில் வேளாண்மை நடந்துவரும் நிலையில், ஆரம்பத்தில், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது என்பது இயலாத காரியம் போல் இருந்தது எனினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மரங்களின் அவசியத்தை கிராமப்புற மாணவ, மாணவியர்கள் நன்கு உணர்ந்திருந்ததால், தண்ணீரை தேடிச் சென்று கொணர்ந்து, ஊற்றி, மரங்களைக் காப்பாற்றினர்.

ஆண்டுதோறும் மரங்கள் நடப்பட்டு வருவதால், கடந்த 36 ஆண்டுகளில் 1000 மரங்களுக்கு மேல் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு உயர் பதவிகளில் முன்னாள் பள்ளி மாணவர்கள் வகித்து வந்தாலும், அவ்வப்போது பள்ளிக்கு வந்து தாங்கள் நட்ட மரங்களைப் பார்த்துச் செல்கின்றனர். சிலர், மரத்தின் நிழலில் அமர்ந்து, தங்களது பள்ளி வாழ்க்கையை நினைவுகூர்ந்து செல்கின்றனர். இதனை பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். 

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.