2016-11-01 12:58:00

மூவேளை செபஉரை : கிறிஸ்தவர்கள், நல்மனதுடையோருடன் ஒருமைப்பாடு


நவ.01,2016. இக்கொண்டாட்டத்தை நிறைவுச் செய்யும் இவ்வேளையில், இத்திருப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு உதவிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். கத்தோலிக்கர்கள் என்ற முறையில் நாம், பெரிய கிறிஸ்தவக் குடும்பத்தின் ஒரு பகுதியாகவும், அந்த ஒன்றிப்பினால் ஊட்டம்பெற்றவர்களாகவும் உள்ளோம். உங்கள் விசுவாசத்தை, செபத்திலும், அருளடையாளங்களிலும், உதவித் தேவைப்படும், மற்றும், துன்புறும்  மக்களுக்கு உதவுவதிலும் வெளிப்படுத்துமாறு உங்களுக்கு நான் ஊக்கமளிக்கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக, உலகின் உப்பாகவும் ஒளியாகவும் செயல்படுங்கள். கிறிஸ்துவின் சீடர்களாகிய நீங்கள், ஏனைய கிறிஸ்தவ சபையினருக்கும், நல்மனதுடையவர்களுக்கும் உயரிய மதிப்பை வழங்குவதுடன், அவர்களுடன் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்க ஊக்கமளிக்கிறேன்.  நம் வாழ்வில் நாம் தனியாக இல்லை. அன்னை மரியா நமக்கு உதவுவதோடு, எப்போதும் நம்மோடு துணை வருகிறார். இன்று, இந்த அனைத்துப் புனிதர்களின் நாளில், அன்னை மரியா, புனிதர்களுள் முதன்மையானவராக, இயேசுவின் முதல் சீடராக நம் முன் நிற்கிறார். அன்னையின் பாதுகாப்பை வேண்டி அவரை நோக்கிச் செல்வோம். அவரிடம் நம் சோகங்களையும் மகிழ்வையும், அச்சங்களையும் ஏக்கங்களையும் சமர்ப்பிப்போம். அவர் நம்மை அன்னைக்குரிய அக்கறையுடன் வழிநடத்தி, நம்மை பராமரிக்கிறார் என்பதை முழுவதுமாக உணர்ந்தவர்களாக, அனைத்தையும் அவர் கரங்களில் ஒப்படைப்போம். எனக்காக செபிக்க மறவாதீர்கள். நானும் உங்களுக்காக செபிக்கிறேன். தற்போது அனைவரும் ஒன்றிணைந்து நண்பகல் மூவேளை செபத்தை செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.