2016-10-29 14:41:00

பொதுக்காலம் - 31ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இறைவன், ஒளிமிக்க வாழ்வை வழங்கவேண்டுமென்று வாழ்த்துவோம், வேண்டுவோம். ‘ஒளிமிக்க வாழ்வு’ என்று சொன்னதும், இல்லங்களில் செல்வம் நிறைவதை மட்டும் எண்ணிப்பார்க்காமல், உள்ளங்களில் அறிவொளி பெறுவதையும் எண்ணிப்பார்க்க, இந்தத் திருநாள் நம்மை அழைக்கிறது. அறிவொளி பெற்றவர்களாய், தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் எவ்விதம் கொண்டாடுவது என்பதைக் கூறும் சில காணொளித் தொகுப்புகள், கடந்த சில நாட்களாக, சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. அவற்றில் ஒன்று, என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. அக்காணொளித் தொகுப்பில், பின்வரும் காட்சி இடம்பெறுகிறது:

இளைஞர் ஒருவர், சில 100 ரூபாய் நோட்டுக்களை, சாலையோரமாக அடுக்கிவைக்கிறார். பின்னர் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அந்த ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்துகிறார். அந்நேரம், அவ்வழியே, ஒரு வீட்டுத்தலைவர், தீபாவளிக்கென வாங்கிய பட்டாசு, மத்தாப்பு பைகளைச் சுமந்தவண்ணம் வருகிறார். ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்திக் கொண்டிருக்கும் இளைஞரைத் தடுக்க முயற்சி செய்கிறார், அம்மனிதர். "சார், உங்களுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?" என்று கேட்கும் அவரிடம், "நீங்க செய்வது மட்டும் புத்தியுள்ள செயலா?" என்று திருப்பிக் கேட்கிறார், இளையவர்.

இளைஞரையும், தன் கையிலிருந்த பட்டாசுக் கட்டுக்களையும் மாறி, மாறிப் பார்க்கும் அந்த வீட்டுத்தலைவரிடம், "சாம்பலாகும் இந்தப் பட்டாசுகளுக்கு நீங்கள் செலவழித்தப் பணத்தைக் கொண்டு, எத்தனையோ வறியோர் வீடுகளில் ஒளியேற்றியிருக்க முடியும். தீபாவளியைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு, உடையும், உணவும் வாங்கித் தந்திருக்கலாமே" என்று கூறுகிறார் இளைஞர்.

வறியோரின் இல்லங்களில் ஒளியேற்றி, அவர்களுடன் விருந்து கொண்டாட, தீபாவளி ஒரு தகுந்த தருணம் என்று சிந்திக்கும் இஞ்ஞாயிறன்று, நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியும், இதையொத்த ஒரு நிகழ்வைக் கூறுகிறது. வறுமைப்பட்ட ஒருவர் இல்லத்திற்கு, இயேசு, தானாகவே சென்ற நிகழ்வு இது. பொருளாதார அடிப்படையில் வறுமைப்படவில்லை எனினும், சமுதாய அடிப்படையில், வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, உள்ளத்தில் வறுமையைச் சுமந்து வாழ்ந்த ஒருவரது வீட்டிற்கு, எவ்வித அழைப்பும் இன்றி, இயேசு, தானாகவே செல்கிறார். வரி வசூலிக்கும் சக்கேயுவை, இயேசு சந்தித்த இந்த நிகழ்வு, நற்செய்தியாளர் லூக்கா மட்டும் நமக்கு வழங்கியுள்ள பரிசு.

‘இயேசு எரிகோ நகர்வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார்’ என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இந்நிகழ்வை, ஒரு கற்பனைக் காட்சியாகக் காண முயல்வோம். நகர்வழியே நடந்து சென்ற இயேசுவைச் சுற்றி, வழக்கம்போல் கூட்டம் அலைமோதியது. இத்தகையக் கூட்டங்களை, பல வழிகளில் சமாளித்து, இயேசுவிடம் நலம் பெற்றவர்கள் உண்டு. கூட்டத்தில் துணிந்து புகுந்து, இயேசுவின் ஆடையைத் தொட்ட பெண், கூட்டம் நிரம்பி வழிந்த வீட்டின் கூரையைப் பிரித்து இறக்கப்பட்ட முடக்குவாத நோயாளி, கூடச் சென்ற கூட்டம் தன்னை அடக்கப்பார்த்தாலும், தூரத்தில் இருந்து கத்தி, இயேசுவின் கவனத்தை ஈர்த்த, பார்வைத்திறன் அற்றவர்... இப்படி பலர் இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்தைச் சமாளித்துள்ளனர். இயேசுவிடம் சென்றால் புதுமை நடக்கும் என்ற எதிபார்ப்புடன், இவர்கள், அவரை அணுகியவர்கள். இன்று நாம் சந்திக்கும் சக்கேயு, எந்தப் புதுமையையும் எதிர்பார்க்காமல், இயேசுவிடம் வந்தவர்.

சக்கேயுவை அறிந்துகொள்ள முயல்வோம்... அவர் செல்வந்தர், வரி வசூலிப்பவர்களின் தலைவர், குள்ளமான மனிதர். அவர், இவர் என்று, சக்கேயுவை, நாம் மரியாதையுடன் குறிப்பிடுவதை, இஸ்ரயேல் மக்கள் கொஞ்சமும் விரும்பமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை, சக்கேயு ‘அவர்’ அல்ல, ‘அவன்’. அவன் ஒரு பாவி, துரோகி.

சொந்த நாட்டிலேயே, அந்நியனுக்கு வரி செலுத்தி வந்ததால், இஸ்ரயேல் மக்கள், உரோமையர் மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்தனர். அதைவிட, உரோமையருக்கு வரி வசூல் செய்து கொடுத்த யூதர்களைக் கண்டு, மிக அதிக வெறுப்பு அவர்களுக்கு. பாவிகள், துரோகிகள், புல்லுருவிகள், என்ற பல பழிச்சொற்களால் அவர்களை தினமும் அர்ச்சித்து வந்தனர்.

இத்தகையப் பழிச்சொற்களுக்கு உள்ளான வரிவசூலிப்பவர் ஒருவருடைய குடும்பத்தில் சக்கேயு பிறந்திருக்க வேண்டும். வயது வந்தபின், இத்தொழிலை அவர் தானாகவே தேர்ந்தெடுத்திருக்கலாம் அல்லவா? சக்கேயு, வரி வசூலிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் என்பது என் கணிப்பு. நான் இவ்வாறு கூற காரணம், சக்கேயு, குள்ளமாய் இருந்தார் என்ற குறிப்பு. வரி வசூலிப்பவர் குடும்பத்தில் பிறப்பதற்கும், குள்ளமாய் இருப்பதற்கும் என்ன தொடர்பு? சக்கேயு, பிறந்தது முதல், மற்றவர்களின் வெறுப்புக்கும், கேலிக்கும் உள்ளானதால், அவரால் வளர முடியவில்லை. யூத சமுதாயம், சக்கேயுவை, பாவி, துரோகி என்று குட்டிக்கொண்டே இருந்ததால், அவர் குனிந்து, குனிந்து, குள்ளமாய்ப் போனார்.

“இயேசு யார் என்று பார்க்க சக்கேயு விரும்பினார்” என்று நற்செய்தி கூறுகிறது. இது வெறும் ஆர்வக்கோளாறு, ஒரு பார்வையாளரின் மனநிலை. சக்கேயு வாழ்ந்த மாடி வீட்டுப் பக்கம் இயேசு வந்திருந்தால், மாடியில், நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இயேசு, தன் வீட்டைக் கடந்து போவதைப் பார்த்திருக்கலாம். மாடியிலிருந்து பார்த்திருந்தால், இயேசுவும், அந்தக் கூட்டமும் குள்ளமாகத் தெரிந்திருக்கும். ஊர் மக்களை, குள்ளமாய் பார்ப்பதில், சக்கேயுவுக்கு ஒரு தனி திருப்தி இருந்திருக்கும். ஆனால், அதற்கு வழியில்லை. இயேசு சுற்றி வந்த வீதிகள் எல்லாம், ஏழைகள் வாழும் பகுதிளாக இருந்தன. தன் வீட்டுப்பக்கம் இயேசு வரமாட்டார் என்று நன்கு அறிந்திருந்த சக்கேயு, தன்னுடைய தன்மானத்தை, தற்பெருமையை, ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவைத் தேடிச்சென்றார். வெறும் ஆர்வம்தான் அவரை இயேசுவிடம் கொண்டுவந்தது என்றாலும், மீட்பின் முதல் படிகளில் சக்கேயு ஏற ஆரம்பித்துவிட்டார். தற்பெருமையை மூட்டை கட்டிவிட்டு, ஒரு மரமேறி அமர்ந்தார். இது, சக்கேயுவின் பயணம்.

இனி, இயேசுவின் பயணம்...

எரிகோ வீதிகளில் இயேசு நடந்து சென்றபோது, தூரத்தில், ஒரு மரத்தின் மீது நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள் மரமேறி அமர்வது, சாதாரண விடயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர். இவர் ஏன் மரமேறி அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை மனநிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர்போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்? என்று பல சிந்தனைகள் இயேசுவுக்குள் அலைமோதின. அவர் யார் என்று, அருகில் இருந்தவர்களிடம் கேட்டார், இயேசு. கூட்டத்தில் ஒரு சிலர், இயேசு சுட்டிக்காட்டிய மனிதரைப் பார்த்தனர். கோபம், வெறுப்பு, கேலி இவை அனைத்தும் அவர்கள் பதிலில் ஒலித்தன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி" என்று, அவர்கள் அடுக்கடுக்காய் குத்திய முத்திரைகளை ஒதுக்கிவிட்டு, அவர் பெயர் என்ன என்று கேட்டார், இயேசு. பாவி, துரோகி என்றே, அவரை இதுவரை அழைத்துவந்ததால், அவருடைய இயற்பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசுவோ விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்டார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொன்னார்கள். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார். (லூக்கா 19:5)

புதுமையொன்று ஆரம்பமானது. மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளைக் கேட்டுக் கேட்டு, தன் பெயரையே மறந்துபோயிருந்த சக்கேயுவிடம், மாற்றங்கள் ஆரம்பமாயின. இயேசு, அவரைப் பெயர் சொல்லி அழைத்ததும், வெறுப்பிலும், கசப்பிலும் தன்னையே சிறைப்படுத்தியிருந்த சக்கேயு, மரத்திலிருந்து மட்டும் இறங்கவில்லை, தன் வெறுப்புச் சிறையிலிருந்தும் வெளியேறினார்.

மற்றவர்களைப் பெயர் சொல்லி அழைக்கும்போது, உறவுகள் உறுதிப்படுவதையும், ஆழப்படுவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். முன் பின் தெரியாத ஒருவர், அதுவும், தன்னைப் பழிச்சொற்களால் வதைத்து வந்த அதே யூத குலத்தைச் சார்ந்த ஒருவர், தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயு மாற்றம் அடைந்தார். அந்த மனமாற்றத்தைப் பற்றி சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.

விவிலியத்திலும், கிறிஸ்தவ பாரம்பரியத்திலும் மனம் மாறியவர்களைப் பற்றி பல கருத்துக்கள் கேட்டிருக்கிறோம். சக்கேயுவின் மனமாற்றம், தனிச் சிறப்பு மிக்கது. "ஆண்டவரே, இனி நான் நல்லவனாக இருப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். தான தர்மம் செய்வேன்" என்று சக்கேயு பொதுவாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், சக்கேயுவின் கூற்று, மிகத் தெளிவானத் திட்டங்களாக ஒலித்தது. "ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை நான் எழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். யாரையாவது ஏமாற்றி, எதையாவது பறித்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பி கொடுத்து விடுகிறேன்." - லூக்கா 19: 8

பாதி சொத்து ஏழைகளுக்கு, ஏமாற்றியதற்கு நான்கு மடங்கு பரிகாரம். மிகத் தெளிவான மனமாற்றம். தன் வாழ்வுடன் அவர் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தம் என்று கூட சொல்லலாம். மேலும், சக்கேயு பயன்படுத்திய வார்த்தைகள், நிகழ்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. 'நான் ஏழைகளுக்குக் கொடுப்பேன்; ஏமாற்றியவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்' என்று எதிர்காலத்தில் பேசாமல், 'கொடுத்து விடுகிறேன்' என்று கூறுகிறார். 'வானத்தை வில்லாக வளைப்பேன்; மணலைக் கயிறாகத் திரிப்பேன்' என்று, தலைவர்கள் தாராளமாக வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகள் அல்ல இவை. நிகழ்கால, நடைமுறை வாக்குறுதிகள். சக்கேயுவின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து, இயேசு தரும் ஆசீரும், எதிர்காலத்தை குறிக்காமல், "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" (லூக்கா 19: 9) என்று நிகழ்காலத்தில் அமைகிறது.

இந்த வாக்குறுதிகளை, சக்கேயு, 'எழுந்து நின்று' சொன்னதாக நற்செய்தி சொல்கிறது. இயேசுவிடம் இரகசியமாக முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல... விருந்தில் கலந்து கொண்டவர்கள், விருந்து பரிமாறிய பணியாட்கள் என்று, அனைவர் முன்னிலையிலும் நிமிர்ந்து நின்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது. சக்கேயு இந்த வார்த்தைகளை 'எழுந்து நின்று' சொன்னபோது, உடல் அளவில், குள்ளமாகவேத் தோன்றினார். ஆனால், மனதளவில் உயர்ந்திருந்தார். முற்றிலும் மாற்றம் பெற்றார். தன்னுடையப் பெயரைச் சொல்லி இயேசு அழைத்த அந்த பரிவு, அன்பு, இந்த மாற்றத்தை உருவாக்கியது.

இயேசுவைச் சந்திக்கும் ஆவல், அந்த ஆவலை நிறைவேற்ற இயேசு எடுத்த முயற்சி, அச்சந்திப்பினால் உருவான வாழ்வு மாற்றம், இறைவனின் நிறைவான அன்பு, மன்னிப்பு, ஆசீர் என்று... இந்நிகழ்வு, அழகிய பல உணர்வுகளைத் தீட்டியுள்ளது.

அன்பு, மன்னிப்பு ஆகியவை, நிரந்தரமான அழகுள்ளவை. “A thing of beauty is a joy forever.” "அழகானது, என்றென்றும் ஆனந்தம் தருவது" என்று கவிஞர் John Keats அவர்கள் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களையும், அழகையும் இணைத்து, வேறொருவர் எழுதியது இது: "கிறிஸ்தவர்கள் அழகை விரும்பவேண்டும். எங்கெங்கு அழகு வெளிப்படையாகத் தெரிகிறதோ, அதை மதிக்க வேண்டும். எங்கெங்கு அழகு மறைக்கப்பட்டுள்ளதோ, அதை வெளிக்கொணர வேண்டும். எங்கெங்கு அழகு அழிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அதை மீண்டும் உருவாக்க வேண்டும். எங்கெங்கு அழகு இல்லையோ, அங்கெல்லாம் அழகைப் படைக்க வேண்டும்." இதைத்தான் இயேசு இன்று நற்செய்தியில் செய்திருக்கிறார். "நேர்மையற்ற மனிதராய் சக்கேயு மரம் ஏறினார். புனிதராய் அவரை மரத்தினின்று இறக்கினார், இயேசு."

ஒளியிழந்து வாழும் பலர் வாழ்வில் ஒளியேற்ற, நம்மை அழைக்கும் இந்த தீபாவளித் திருநாளன்று, நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியிலிருந்து, பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்: ஒருவர் வாழ்வில் உண்மையில் ஒளியேற்ற வேண்டுமெனில், ஒருவரை உண்மையில் மாற்ற வேண்டுமெனில், ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமெனில், அவர்மீது நாம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களையும், அதன் விளைவாக நாம் குத்தும் முத்திரைகளையும் கிழித்தெறிந்துவிட்டு, அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவருக்குரிய உண்மை மதிப்பை வழங்குவோம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.