2016-10-18 15:42:00

பூர்வீக இனத்தவரின் உரிமைகள் காக்கப்பட உலகினருக்கு அழைப்பு


அக்.18,2016. ஐ.நா. பொது அவையின் 71வது அமர்வில், பூர்வீக இன மக்களின் உரிமைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில், இத்திங்களன்று உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், பூர்வீக இன மக்கள், தங்களின் பாரம்பரிய வளங்களைப் பாதுகாப்பதற்கு, எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எடுத்துரைத்தார்.

பூர்வீக இன மக்கள், தங்களின் பாரம்பரிய வளங்களையும், மொழியையும், மத மரபுகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கு, அவர்களுக்கு இருக்கின்ற  உரிமைகளை, பன்னாட்டு சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று பேராயர் அவுசா அவர்கள் வலியுறுத்தினார்.

தற்போதைய உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார கோட்பாட்டில், பூர்வீக இன மக்கள், தங்களின் கலாச்சாரமும், வாழ்வாதாரங்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதை அனுபவித்து வருகின்றனர் என்றும் கூறினார் பேராயர் அவுசா.

உலகில், ஏறக்குறைய 90 நாடுகளில், 37 கோடிக்கு மேற்பட்ட பூர்வீக இனத்தவர் வாழ்கின்றனர். இவர்கள் உலக மக்கள் தொகையில், 5 விழுக்காடு மட்டுமே என, ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.