2016-10-15 17:00:00

திருத்தந்தை, அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Macri சந்திப்பு


அக்.15,2016. அர்ஜென்டீனா நாட்டு அரசுத்தலைவர் Mauricio Macri அவர்களையும், அவரின் குடும்பத்தினரையும், இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரசுத்தலைவர் Macri அவர்கள், கடந்த பிப்ரவரி 27ம் தேதி, திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தனியே சந்தித்துப் பேசினார் என்பதும், அச்சமயத்தில், அர்ஜென்டீனாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளுமாறு திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஞ்ஞாயிறன்று, அர்ஜென்டீனா அருள்பணியாளர் Jose Gabriel del Rosario Brochero அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியில் கலந்துகொள்வதற்காக உரோம் வந்துள்ளார் அரசுத்தலைவர் Macri.

மேலும், இஞ்ஞாயிறன்று, Salomone Leclercq(Guglielmo Nicola Ludovico), Giuseppe Sánchez del Río, Manuel González García, Lodovico Pavoni, Alfonso Maria Fusco, Giuseppe Gabriele del Rosario Brochero, Elisabetta della Santissima Trinità ஆகிய ஏழு அருளாளர்களை, புனிதர்களாக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலை 10.15 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றும் திருப்பலியில், இந்த எழுவரையும் புனிதர்களாக அறிவிப்பார் திருத்தந்தை. இத்திருப்பலிக்கு முன்னர், இதில் கலந்துகொள்ளும், பல நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளை, வத்திக்கான் பசிலிக்காவில் சந்திப்பார் திருத்தந்தை. 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருளாளர் Salomone Leclercq அவர்கள், கிறிஸ்தவ சகோதரர் சபையைச் சார்ந்தவர். இவர், ப்ரெஞ்ச் புரட்சியின்போது, 1792ம் ஆண்டில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, கர்மேல் சபையினர் இல்லத் தோட்டத்தில் கொடூரமாய், தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த, அருளாளர் Giuseppe Sánchez del Río அவர்களும், மெக்சிகோவில், கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறை கலகத்தின்போது, கிறிஸ்துவ விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததற்காக, 1928ம் ஆண்டில், கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். பின்னர், அவர், கல்லறைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குக் கொல்லப்பட்டார்.

இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயர் அருளாளர் Manuel González García அவர்கள், நாசரேத் திருநற்கருணை மறைபோதக சபையை ஆரம்பித்தவர். "நற்கருணைப்பேழை ஆயர்" என்று அழைக்கப்படும் இவர், 1940ம் ஆண்டில், தனது 63வது வயதில் காலமானார். இத்தாலியரான அருளாளர் அருள்பணியாளர் Lodovico Pavoni அவர்கள், ஆண்களின் தேவையில் அதிகக் கவனம் செலுத்தியவர். 1825ம் ஆண்டில், அமலமரி புதல்வர்கள் சபையைத் தொடங்கியவர். இச்சபையினர், "Pavoniani" என அழைக்கப்படுகின்றனர்.

இத்தாலியரான அருளாளர் Alfonso Maria Fusco அவர்கள், புனித திருமுழுக்கு யோவான் சகோதரிகள் சபையை நிறுவியவர். அர்ஜென்டீனா நாட்டு அருளாளர் அருள்பணியாளர் Jose Gabriel del Rosario Brochero அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் தொழுநோயால் துன்புற்றவர். 1914ம் ஆண்டில் இறந்த இவர், ஏழைகள் மற்றும் நோயாளர்க்குச் சேவையாற்றியவர். இவர், கால்நடைகளை மேய்க்கும் அருள்பணியாளர் என அழைக்கப்படுகின்றார். அருளாளர் Elisabetta della Trinità அவர்கள், ப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த கார்மேல் சபை அருள்சகோதரி. இவர் ஒரு தியான யோகி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.