2016-10-12 16:04:00

சிரியாவில் நிகழும் தாக்குதல்களை நிறுத்துங்கள் - திருத்தந்தை


அக்.12,2016. மனிதாபிமானம் ஏதுமின்றி, சிரியாவில் நிகழ்ந்துவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு தான் மீண்டும் ஒருமுறை மிக உருக்கமாகக் கேட்டுக்கொள்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் விண்ணப்பித்தார்.

சிரியாவில் நிகழ்ந்துவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை, குறிப்பாக, குழந்தைகளை, அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்கு உதவும் வகையிலாவது, அங்கு போர் நிறுத்தம் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று, தான் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதாக திருத்தந்தை கூறினார்.

மேலும், அக்டோபர் 13, இவ்வியாழனன்று பேரிடர்களைக் குறைக்கும் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மற்றுமொரு விண்ணப்பத்தையும் வெளியிட்டார்.

இயற்கைப் பேரிடர்களாக இருந்தாலும், போர்களால் உருவாகும் பேரிடர்களாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலும் அதிகத் துன்பங்களை எதிர்கொள்வது, பாதுகாப்பற்ற வறியோரே என்பதை தன் விண்ணப்பத்ததில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இடர்கள் வருவதற்கு முன்னரே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.