2016-10-11 16:44:00

நீதிக்காக, ஏழைகளுக்காக உழையுங்கள், கர்தினால் தாக்லே


அக்.11,2016. திருப்பலியில் கலந்துகொள்வது, செபிப்பது இவற்றில் மட்டும் திருப்தியடையாமல், நீதிக்காகவும், ஏழைகளுக்காகவும் உழைக்க வேண்டுமென்று, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொல்கத்தா அன்னை தெரேசா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டதை முன்னிட்டு நன்றித் திருப்பலி நிறைவேற்றிய, கர்தினால் தாக்லே அவர்கள், ஏழைகளுக்கு உதவுவது, பசியாய் இருப்போர்க்கு உணவளிப்பது போன்ற இரக்கச் செயல்களை,  பாடத்திட்டங்களுக்கு வெளியே ஆற்றப்படும் செயல்கள் போன்று கருதக் கூடாது என்று கூறினார்.

நீதியை நிலைநாட்டவும், ஏழைகள் மீது அன்பு செலுத்தி, பரிவன்பைக் காட்டவும் கத்தோலிக்கர் பணியாற்றவில்லையெனில், அவர்களின் விசுவாசம், முழுமையானதாக இருக்காது என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.

சமுதாயத்தில் கடைப்பட்டவர்களுக்குப் பணியாற்றியதன் வழியாக, புனித அன்னை தெரேசா அவர்கள், தனது விசுவாசத்தையும், இறையன்பையும் வெளிப்படுத்தினார் என்று மேலும் கூறினார் கர்தினால் தாக்லே.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.