2016-10-10 15:37:00

திருத்தந்தை புதிதாகத் தெரிவு செய்துள்ள 17 கர்தினால்கள்


அக்.10,2016. புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 17 கர்தினால்களின் பெயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின் அறிவித்தார்.

அன்னை மரியாவின் யூபிலி கொண்டாட்டங்களின் இறுதியில் நிகழ்ந்த திருப்பலியைத் தொடர்ந்து, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த 14,000த்திற்கும் அதிகமான விவுவாசிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மகிழ்வான செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த புதிய கர்தினால்களுக்கு நவம்பர் 19ம் தேதி நடைபெறும் திருவழிபாட்டில் பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும், நவம்பர் 20, இரக்கத்தின் சிறப்பு யூபிலியின் இறுதி நாளான, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று அவர்கள் தன்னுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வர் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.

11 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 17 கர்தினால்களில், 13 பேர் 80 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும், நால்வர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதையும் திருத்தந்தை தன் அறிவிப்பில் கூறி, புதிய கர்தினால்களுக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.