2016-09-29 16:06:00

ஜார்ஜியா, அசர்பைஜான் நாடுகள் பயணம் - கர்தினால் பரோலின்


செப்.29,2016. மக்களிடையே அமைதியைக் கொணர்வது, திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணங்களின் முக்கிய நோக்கமாக இருந்துவருகிறது என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 30 இவ்வெள்ளி முதல், அக்டோபர் 2, ஞாயிறு முடிய, ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்து, கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த பேட்டியில், பொருள் மிகுந்த கலாச்சாரங்களைக் கொண்டுள்ள இவ்விரு நாடுகளிலும் நிலவிவரும் இறுக்கமான சூழலைக் குறைப்பதற்கு, திருத்தந்தையின் பயணம் உதவும் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 16வது திருத்தூதுப் பயணத்தில், "உங்களுக்குச் சமாதானம்" என்பது, ஜார்ஜியா நாட்டுப் பயணத்தின் விருது வாக்காகவும், "நாம் அனைவரும் உடன்பிறந்தோர்" என்பது, அசர்பைஜான் நாட்டுப் பயணத்தின் விருது வாக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தாமல், ஒருவர் ஒருவரை மேலும் வளர்ப்பதற்கு, சந்திப்பு கலாச்சாரம் அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறிவரும் உண்மை, இப்பயணத்திலும் வலியுறுத்தப்படும் என்று, கர்தினால் பரோலின் அவர்கள், வத்திக்கான் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.