செப்.26,2016. அன்பு நேயர்களே, காவிரி விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. செப்டம்பர்
27, இச்செவ்வாய்க்கிழமைக்குள் தமிழகத்துக்கு ஆறாயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற
உச்ச நீதிமன்ற உத்தரவில், திருத்தம் கோரி, கர்நாடக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளதாக,
இஞ்ஞாயிறன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மனித நேயம் எங்கே என்ற கேள்வியே இங்கு எழுந்து
நிற்கின்றது. இவ்விவகாரம் இப்படி சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின், பெரம்பலூர்
மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும்
பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி
பெற்று தூர் வாரி வருகின்றனர் என்ற செய்தி, மற்ற கிராமத்தினருக்குத் தூண்டுதலாக இருக்கும்,
அந்தந்த ஊர் மக்களே, தங்களின் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது. இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அவர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு,
இளைஞர்கள், இந்த நற்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தி இந்து நாளிதழில் வாசித்தோம். அன்பு
நேயர்களே, சமுதாயத்தில் மனித நேயம் வளர்ந்தால், பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்க்கப்படும்,
எல்லாரும் ஒரு தாய் மக்கள் என்ற நல்லுணர்வு மேலோங்கும். கல்யாணமாலை அமைப்பு கோவையில்,
மனித நேயமே மகிழ்ச்சி என்ற தலைப்பில் நடத்திய பேச்சரங்கம் நிகழ்ச்சியில், பேராசிரியர்
முனைவர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள், எங்கெல்லாம் மனித நேயத்தை பார்க்கலாம் என்பதை
எளிய முறையில் சொல்லியிருக்கிறார்.
பேராசிரியர் முனைவர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் அழகாகச் சொன்னது போல, மனித நேயத்திற்கு காசு வேண்டாம், பணம் வேண்டாம், முன்பின் அறிமுகம்கூட வேண்டாம், இதயத்தால் சிந்தித்து, புத்தியால் உணர்ந்தாலே மனித நேயம் மனதில் சுரந்துவிடும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |