2016-09-26 17:13:00

கிறிஸ்தவ ஒன்றிப்பே, சுவீடன் திருத்தூதுப் பயணத்தின் மையம்


செப்.26,2016.  அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுவீடன் நாட்டுக்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்த முழு விபரங்கள் இத்திங்களன்று திருப்பீடத்தில் வெளியிடப்பட்டன.

லூத்தரன் சீர்திருத்த சபை உருவானதன் 500ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு சுவீடன் நாடு செல்ல உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 31, திங்கள்கிழமை பகல் 11 மணிக்கு, அந்நாட்டின்  Malmö நகரைச் சென்றடைவார். அங்கு அந்நாட்டு பிரதமருடன் ஆன சந்திப்பிற்குப் பின்னர், Lund நகருக்குச் சென்று, சுவீடன் அரச குடும்பத்தினரை மரியாதையின்பேரில் சந்திப்பார்.

பின்னர், Lund  லூத்தரன் பேராலயத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொண்டு மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலையில், Malmöவில், மற்றுமொரு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் கலந்துகொண்டு உரையொன்று வழங்குவதுடன், இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவார்.

நவம்பர் முதல் தேதி செவ்வாய் காலையில், Malmöவின் Swedbank அரங்கில் சுவீடன் கத்தோலிக்க சமூகத்திற்குத் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், உரோம் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை உள்ளூர் நேரம் 3.30 மணிக்கு, உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேருவார் என திருப்பீடம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.