2016-09-26 15:46:00

இது இரக்கத்தின் காலம் : ஒற்றுமையே பலம்


அது இரவு நேரம். அந்த மலையடிவாரத்தில் இருந்த ஓர் அழகான குடிசை வீட்டில், எண்ணெய் விளக்கு சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பூனை, ‘விளக்கே நீ சுடர்விட்டு எரிவதால்தான் இந்த இடமே வெளிச்சமாக இருக்கிறது. இதற்கு யார் காரணம்?’ என்று கேட்டது. அப்போது விளக்குப் பக்கத்தில் இருந்த தீப்பெட்டி, நான்தான் இந்த விளக்கை பற்ற வைத்தேன், எனவே நான்தான் காரணம்.’என்றது. ‘இல்லை. இல்லை. விளக்கு எரிய நான்தான் காரணம், ஏனென்றால் நான்தான் விளக்கு எரிய எண்ணெய்யை இழுத்து மேலே கொடுக்கிறேன்’என்றது திரி. இதைக் கவனித்த எண்ணெய், விளக்கு எரிய முக்கிய பொருளே எண்ணெய்தான். எனவே விளக்கு எரிய நான்தான் காரணம்‘ என்று சொன்னது. அப்போது குடுவை, இவர்கள் எல்லாரையும் தாங்கி நிற்பது நான்தான். எனவே விளக்கு எரிய நான்தான் காரணம்’என்றது. இப்படி ஒவ்வொருவரும் சொன்னதும், பூனைக்கு ஒரே குழப்பம். இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஓர் ஆந்தை, பூனையிடம், நீ நாளைக்கு வா. விளக்கு எரிய யார் காரணம் என்று சொல்கிறேன்’என்றது. மறுநாள் காலை விளக்கு அணைக்கப்பட்டது. அந்த வீட்டுக்காரர் விளக்கை தனித் தனியாகக் கழற்றி துடைத்து காய வைத்துக்கொண்டிருந்தார். ஆந்தையும் பூனையும் வந்தன. தனித் தனியாக இருந்த தீப்பெட்டி, விளக்கு, திரி, எண்ணெய், குடுவை இவற்றைப் பார்த்து, ‘உங்களில் யாரால் தனியாக விளக்கை எரிய வைக்க முடியுமோ. அவங்க முன்னாடி வரலாம்’என்று ஆந்தை சொல்ல, நான்கு பேரும் திருதிருவென முழித்தனர். பிறகு ஆந்தை சொன்னது -  ‘நீங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தால்தான் விளக்கு எரியும். உங்களில் ஒருவர் இல்லையென்றால் கூட விளக்கு எரியாது’என்று. ஆம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.