2016-09-21 15:56:00

இது இரக்கத்தின் காலம் – கவலைப்படுவதால் காலம் மாறிவிடுவதில்லை


காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. “எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன பயன்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவும் சத்தம் என்னை நடுங்க வைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா?” என்று தன்னைத்தானே நொந்துகொண்டபடி இருந்தது. அவ்வேளையில், அவ்வழியே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது. அதைப் பார்த்த சிங்கம், "உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து சண்டையிடமாட்டார்களே! எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது. அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்துக் கொட்டிவிட்டால், என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு, கவலையோடு நடக்கிறேன்" என்றது. அதைக் கேட்ட சிங்கம், "இவ்வளவு பெரிய உடம்பை வைத்திருக்கும் யானைக்கு எந்தக்  கவலையும் இல்லை என்று நினைத்தால், அதுகூட கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது! கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்றதுபோல் மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல், கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் நல்ல விடயங்களைப் பார்த்து, மகிழ்வாக வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று புரிந்து கொண்டது. அன்றிலிருந்து சிங்கம், கவலைப்படுவதை விட்டுவிட்டு, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.