2016-09-16 16:13:00

திருத்தந்தையுடன், டெண்டை புத்தமதப் பிரிவின் தலைவர்


செப்.16,2016. "ஆண்டவருக்கு முன் தங்களையேத் தாழ்த்துவோர், அவரது பெரும் இரக்கத்தைச் சுவைக்கமுடியும்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

இவ்வெள்ளி காலையில், டெண்டை (Tendai) புத்தமதப் பிரிவின் தலைவர், வணக்கத்திற்குரிய Koei Morikawa அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் நாட்டில், 8ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட டெண்டை புத்தமதப் பிரிவின் 257வது தலைவராக, 91 வயது நிரம்பிய Morikawa அவர்கள் பணியாற்றுகிறார்.

மேலும், பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில், இவ்வாண்டு ஜூலை 14ம் தேதி கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே ஒரு லாரியை ஒட்டிச்சென்று, மக்களைக் கொன்ற அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 24, அடுத்த சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்திப்பார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

அவ்வண்ணமே, செப்டம்பர் 25, ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் மறைக்கல்வி ஆசிரியர்களின் யூபிலியையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.