2016-09-15 16:34:00

வத்திக்கானில் பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி துவக்கம்


செப்.15,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 15, இவ்வியாழன் முதல், 17 இச்சனிக்கிழமை முடிய, பாப்பிறை பிரதிநிதிகளின் யூபிலி வத்திக்கானில் நடைபெறுகிறது.

திருப்பீடத்தின் தூதர்களாக உலகின் பல நாடுகளில் பணியாற்றும் பிரதிநிதிகள், மற்றும் ஐ.நா. போன்ற உலக அவைகளில் திருப்பீடத்தின் சார்பாகப் பணியாற்றும் பிரதிநிதிகள் இணைந்துவந்து கொண்டாடும் யூபிலி இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகில் 103 திருப்பீடத் தூதர்கள் மற்றும், உலக அவைகளில் பணியாற்றுவோர் 5 பேர் என, திருப்பீடத்தின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றும் 108 ஆயர்களில், இருவரைத் தவிர, ஏனைய 106 ஆயர்கள் இந்த யூபிலியைக் கொண்டாட வத்திக்கானுக்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் 15, இவ்வியாழன் காலை 8 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவின் ஒரு சிற்றாலயத்தில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஆற்றிய திருப்பலியுடன் இந்த யூபிலி கொண்டாட்டம் துவங்கியது.

செப்டம்பர் 16, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தின் தூதர்களாகப் பணியாற்றுவதில் உள்ள சவால்கள், பலசமய உரையாடல், குறிப்பாக, இஸ்லாம் சமயத்துடன் உறவு போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் நடைபெறும்.

செப்டம்பர் 17, இச்சனிக்கிழமை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் முன்னாள் திருத்தூதர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்.

யூபிலியைக் கொண்டாடும் பாப்பிறை பிரதிநிதிகள் அனைவரும், இச்சனிக்கிழமை, 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவின் புனிதக் கதவு வழியே நுழைந்து, பசிலிக்கா பேராலயத்தின் ஒரு பகுதியில் திருத்தந்தையால் வரவேற்கப்படுவர் என்றும், மதியம் 1 மணிக்கு, அனைவரும் இணைந்து சாந்தா மார்த்தா இல்லத்தில் விருந்துண்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, நவம்பர் 18ம் தேதி, வத்திக்கானில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுடனும், திருத்தந்தை, யூபிலி ஆண்டைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.