செப்.15,2016. இறைவனின் சாயலில் நாம் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரும்போது, அதே இறைவனால் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மனிதர்கள் மீதும் நம் மதிப்பு கூடுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை சந்திக்க வந்திருந்த விவிலிய அறிஞர்களிடம் கூறினார்.
இத்தாலிய விவிலியக் கழகம், உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள தேசிய விவிலிய வாரத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, ஆண், பெண் உறவு குறித்து அவர்கள் மேற்கொண்ட கருத்துப் பரிமாற்றங்கள் தெளிவைத் தரும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
"மானிடரை நம் சாயலில் உருவாக்குவோம்: விவிலியத்தில் ஆண், பெண் என்ற பாலின துருவங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தைப் போலவே, புனித இரண்டாம் ஜான் பாலும், தானும், மறைக்கல்வி உரைகளில் கருத்துக்கள் பகிர்ந்துகொண்டதை திருத்தந்தை தன் உரையில் கூறினார்.
மானிடரை இறைவன் உருவாக்கியபோது, வெறும் வார்த்தைகளைக் கொண்டு மட்டும் உருவாக்கவில்லை, மாறாக, தன் கரங்கள், மூச்சுக் காற்று இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கினார் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் முழுமையான ஈடுபாட்டுடன் மனிதர்கள் உருவாகியிருப்பது, நமக்கு தனியொரு மதிப்பைத் தருகிறது என்று கூறினார்.
இறைவனுக்கும், அவரால் உருவாக்கப்பட்ட மனிதர்களுக்கும் உரிய மதிப்பைத் தர மறுக்கும்போது, பொன்னாலும், வெள்ளியாலும் ஆன மற்ற போலி தெய்வங்களை வழிபடும் தவறான பாதைக்கு நாம் செல்கிறோம் என்று, தன் உரையில் வலியுறுத்தினார், திருத்தந்தை.
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் மாண்பை, நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் போதுதான், அவரது படைப்பு என்ற முழு நிறைவை நாம் அடைகிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |