2016-09-13 15:15:00

இது இரக்கத்தின் காலம் : கடவுளுக்கும் கரி பூசும் சுயநலம்


பக்தர் ஒருவர், ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் செல்வார். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பல தெய்வங்களில், அவர் மனதுக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் தினமும் தொழுதுவிட்டுத் திரும்புவார். அந்தத் தெய்வத்திற்கு முன், தான் வாங்கிச் செல்லும் ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்து வணங்குவார்.

ஒருநாள், திடீரென, அவருக்குள் ஒரு சிறு நெருடல் உண்டானது. தனக்குப் பிடித்த தெய்வத்திற்கென்று தான் கொளுத்தி வைக்கும் ஊதுபத்திகளின் நறுமணப் புகை, மற்ற தெய்வங்களுக்கும் செல்கிறதே என்று, பக்தருக்குள் இலேசான எரிச்சல் உண்டானது.

அடுத்த நாள், அவர், ஊதுபத்திகளைக் கொளுத்தி வைக்கும்போது, அந்தப் புகை தன் தெய்வத்தை மட்டும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த ஊதுபத்திகளை சுற்றி ஒரு குழாயையும் பொருத்தி வைத்தார். அவர் எதிர்பார்த்தவாறே புகை நேராக அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. பக்தருக்கு பெரும் திருப்தி. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம், நாளடைவில், அந்தப் புகையால் கறுத்துப்போனது.

தெய்வ வழிபாட்டிலும், தனக்கு மட்டுமே என்று, சொந்தம் கொண்டாடும் சுயநலம் புகுந்தால், கடவுளின் முகத்தில் கரி பூசிவிடுவோம், எச்சரிக்கை! இறைவனின் பெயரால் நாம் எழுப்பியுள்ள பிரிவுச் சுவர்களை தகர்த்தெறிய, இரக்கத்தின் காலம் நம்மை அழைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.