2016-09-08 16:16:00

புனித அன்னை தெரேசாவுக்கு தலாய் லாமா பாராட்டு மடல்


செப்.08,2016. அன்பை நடைமுறைப்படுத்துவதில், அன்னை தெரேசா தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா அவர்கள் கூறியுள்ளார்.

அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட தருணத்தையொட்டி, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் சபையின் தற்போதையத் தலைவரான அருள் சகோதரி பிரேமா அவர்களுக்கு, திபெத்திய புத்த மதத் தலைவர், தலாய் லாமா அவர்கள் அனுப்பிய ஒரு மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

1988ம் ஆண்டு, தான் அன்னையை இங்கிலாந்தில் சந்தித்ததை தன் மடலில் நினைவு கூர்ந்துள்ள தலாய் லாமா அவர்கள், எடுத்துக்காட்டான வாழ்வு வாழும் ஒருவரைத் தான் சந்தித்துள்ளோம் என்பதை இச்சந்திப்பில் தன்னால் உடனே உணர முடிந்தது என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, தான் கொல்கத்தா சென்று, அன்னையின் துறவு சபை சகோதரிகள் ஆற்றும் பணிகளைப் பார்த்தபோது, அன்னை காட்டிய பிறரன்பு வழி இன்னும் தொடரப்படுவதை அறிந்து மகிழ்ந்ததாக தலாய் லாமா அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.