2016-09-03 15:00:00

பொதுக்காலம் - 23ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


அந்த ஊருக்குப் புதிதாக மாற்றலாகிவந்த பங்கு அருள்பணியாளர், இளையோரை அதிகம் கவர்ந்தார். அவர் அங்கு வருவதற்குமுன், வறுமைப்பட்ட ஒரு நாட்டில் பல ஆண்டுகள் பணியாற்றிவர். எனவே, அவர், அந்நாட்டில் தான் பெற்ற ஆழமான அனுபவங்களை இளையோரிடம் பகிர்ந்துவந்தார்.

ஒருமுறை, ஞாயிறு திருப்பலி முடிந்தபின், ஓர் இளம்பெண்ணின் பெற்றோர் அவரைக் காண காத்திருந்தனர். அருள்பணியாளர் அறைக்குள் நுழைந்ததும், "சாமி, எங்கள் மகள் எடுத்துள்ள அர்த்தமற்ற, ஆபத்தான முடிவுக்கு நீங்கள்தான் காரணம்" என்று குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் மகள் எடுத்த முடிவு என்ன? நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஓர் ஏழை நாட்டில் ஆறு மாதங்கள் உழைக்கச் செல்வதாக அந்த இளம்பெண் பெற்றோரிடம் கூறியிருந்தார். அந்த முடிவு, பெற்றோரை நிலைகுலைய வைத்தது. அப்பெண் கல்லூரிப் படிப்பை முடிக்க இன்னும் ஓராண்டு இருந்தது. அவ்வேளையில் இதுபோன்ற ஒரு முடிவா? என்று திகைத்த பெற்றோரிடம், தன் கல்லூரிப் படிப்பு ஓராண்டு காத்திருக்கலாம், ஆனால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் காத்திருப்பது, அநீதி என்று மகள் வாதாடினார். தங்கள் மகளை இவ்விதம் மாற்றியது, பங்குத்தந்தை என்று எண்ணி, அவரிடம் முறையிட வந்திருந்தனர், பெற்றோர்.  

"எங்கள் மகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்" என்று இளம்பெண்ணின் பெற்றோர் சொன்னதும், பங்குத்தந்தை ஒரு புன்முறுவலுடன், "இல்லை... நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்" என்று அவர்களிடமே திரும்பக் கூறினார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த பெற்றோரிடம், "ஆம், உங்கள் மகளுக்கு முதலில் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியது யார்? நான் இல்லையே" என்று அருள்பணியாளர் சொன்னார். உடனே, அந்த பெற்றோர், "எங்கள் மகள் ஒரு சராசரி கிறிஸ்தவப் பெண்ணாக வளரவேண்டும் என்றுமட்டும்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காகத்தான் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினோம்" என்று சொன்னார்கள்.

கிறிஸ்துவுக்கு அறிமுகமாவது ஒரு சடங்கு மட்டுமே; அவரை அவ்வப்போது கோவிலில், திருப்பலியில் சந்தித்தால் போதும்; அவர் பெயரைச் சொல்லி, ஒரு சில தான தர்மங்கள் செய்தால் போதும் என்று வாழ்வதுதான் பாதுகாப்பான, சராசரி கிறிஸ்தவ வாழ்வு என்று எண்ணியிருப்பவர்களுக்கு, இன்றைய நற்செய்தி, ஓர் அதிர்ச்சியைத் தர காத்திருக்கிறது. தனக்கு அறிமுகமானவர்கள், தன்னைப் பின்தொடர விழைபவர்கள், வெறும் பெயரளவில், சராசரி கிறிஸ்தவர்களாக வாழ்வது கடினம் என்பதை இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

லூக்கா நற்செய்தி 14 : 25-27

அக்காலத்தில், பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது”.  

இயேசு விடுத்த இச்சவாலை தன் 18வது வயதில் ஏற்று, துறவற வாழ்வைத் தொடர்ந்த ஓர் இளம்பெண்ணை செப்டம்பர் 04, இஞ்ஞாயிறன்று பெருமைப்படுத்துகிறோம். தான் விரும்பித் தேர்ந்த துறவற சபையை விட்டு வெளியேறி, இயேசுவின் சவாலை இன்னும் முழுமையாக நிறைவேற்ற, 1950ம் ஆண்டு, தன் 40வது வயதில், மற்றொரு துறவு சபையை நிறுவி, துன்புறும் மக்களுக்கு தன் முழுமையான அர்ப்பணிப்பை 47 ஆண்டுகளாக வழங்கிய அன்னை தெரேசா, இஞ்ஞாயிறன்று ஒரு புனிதராக உயர்த்தப்படுகிறார். இரக்கத்தின் இறைதூதர், சேரிகளின் காவல்தூதர், சாக்கடையின் புனிதர் என்று, பல வழிகளில் புகழப்படும் அருளாளர் அன்னை தெரேசா, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக, செப்டம்பர் 4, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் சிறப்புத் திருப்பலியில், புனிதராக அறிவிக்கப்படுகிறார். 1950ம் ஆண்டு, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் சபையை உருவாக்கி, வறுமைப்பிடியில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரம் மனிதர்களுக்கு, தன்னால் இயன்ற அளவு விடுதலை வழங்கிய புனித அன்னை தெரேசாவிற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு விடுத்துள்ள சவாலை, புனித அன்னை தெரேசாவைப்போல், முழுமையாகப் பின்பற்றிய பல்லாயிரம் உன்னத உள்ளங்கள், தங்கள் உயிரையும் வழங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர், Dietrich Bonhoeffer (1906-1945). ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் வாழ்ந்த இவர், லூத்தரன் சபை பணியாளர், இறையியலாளர். ஹிட்லரின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், துன்பங்களைச் சந்தித்தவர். ஹிட்லரின் அநீதமான அடக்குமுறைக்கு உதவியாகச் செயல்பட்ட இராணுவத்தில் கட்டாயமாகச் சேரவேண்டியச் சூழலைத் தவிர்க்க, Bonhoeffer அவர்கள், அமேரிக்காவிற்குச் சென்றார். ஆனாலும், தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது, அவர் மனதை உறுத்தியது. மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்பினார். அவர் ஜெர்மனிக்கு வந்தபின், அவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். Flossenberg என்ற முகாமில், 1945ம் ஆண்டு, ஏப்ரல் 9ம் தேதி, Bonhoeffer அவர்கள், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

இயேசுவின் சீடராக வாழ்வது குறித்து சிந்திக்கும் இஞ்ஞாயிறன்று, Dietrich Bonhoeffer அவர்களைப் பற்றி குறிப்பாக எண்ணிப்பார்ப்பதற்குக் காரணம் உள்ளது. அவர் எழுதிய ஓர் அற்புதமான, புகழ் பெற்ற நூலின் பெயர் 'The Cost of Discipleship',  அதாவது, 'சீடராவதற்குத் தரவேண்டிய விலை'. Bonhoeffer அவர்கள், இந்நூலை அறிவுப்பூர்வமான விளக்கமாக எழுதவில்லை. இந்நூலில் விவரித்த சீடராக அவரே வாழ்ந்துகாட்டினார்.

இயேசுவின் சீடராக வாழ்வதென்பது, உலகத்தோடு ஒத்துப்போகும், கும்பலோடு கும்பலாகக் கலந்து, கரைந்து போகும் வாழ்வு அல்ல. Bonhoeffer அவர்கள் விரும்பியிருந்தால், ஹிட்லரின் கொள்கைகளைக் கேள்வி கேட்காமல், ஏற்றுக்கொண்டிருக்கலாம். அல்லது, ஏற்றுக்கொண்டதுபோல் நடித்திருக்கலாம். 39 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்த Bonhoeffer அவர்கள், அமேரிக்கா சென்றபோது, அங்கேயேத் தங்கியிருந்துவிட்டு, போர் முடிந்தபின், ஜெர்மனி திரும்பியிருக்கலாம். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, பல நூல்கள் எழுதி, புகழ் பெற்றிருக்கலாம்.

இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என்று இங்கு நாம் சிந்திப்பவை அனைத்தும், தன்னை மட்டும் காத்துக் கொள்வதற்கு, உலகம் சொல்லித்தரும் வழிகள். ஆனால், Bonhoeffer அவர்கள், உலகம் சொன்ன வழியைவிட, இயேசு சொன்ன வழியை, இன்றைய நற்செய்தி சொன்ன வழியைத் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் சீடராய் வாழ்வதற்கான விலையைக் கொடுத்தார். தூக்கிலிடப்பட்டார்.

Bonhoeffer அவர்களை, சாவதற்கும் துணிந்த சீடராக வாழத்தூண்டிய இயேசுவும், அவர் வாழ்ந்த காலத்தில், உலகத்தோடு ஒத்துப்போயிருந்தால், இளமையிலேயே இறந்திருக்கத் தேவையில்லை. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்வாய் வாழ்ந்திருந்து, இன்னும் பல்லாயிரம் புதுமைகள் ஆற்றி புகழடைந்திருக்கலாம்.

ஒவ்வொரு முறையும் புதுமை செய்தபோது, இயேசுவின் புகழ் பெரிதும் பரவியது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்வது போல், ‘பெருந்திரளான மக்கள்’ இயேசுவை எப்போதும் பின்பற்றிய வண்ணம் இருந்தனர். கூட்டம் கூட்டமாக, மக்களைத் தன் பக்கம் ஈர்த்து, தன் புகழை வளர்ப்பது மட்டுமே இயேசுவின் நோக்கமாய் இருந்திருந்தால், அந்த மக்கள் கூட்டத்தை எப்போதும் மகிழ்விக்கும் செய்திகளையேச் சொல்லி, புதுமைகள் செய்து, சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஒருவேளை, அவர்களது அரசராகக் கூட மாறியிருக்கலாம்.

இவ்வழிகளை இயேசு பின்பற்றியிருந்தால், இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அவர் ஓரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருப்பார். தலைமைத்துவம் என்றால் என்ன என்று, இன்றைய மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களுக்கு ஓர் இலக்கணமாக இயேசு இருந்திருப்பார். இயேசு, தான் வாழ்ந்த காலத்தில், மேலாண்மை பாடங்களைச் சொல்லித் தந்திருக்கிறார். “திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்.” (He who fails to plan, plans to fail) என்பது, மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் ஓர் அரிச்சுவடி.

வாழ்வில் திட்டமிடுவது மிகவும் அவசியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாடம். நம் பேச்சு வழக்கிலும் இதையொத்த எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம்: “சும்மா எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் செஞ்சிடக்கூடாது; ஆர, அமர, யோசிச்சுத்தான் செய்யணும்” என்று. ஆர, அமர சிந்திப்பதைப் பற்றி இயேசு இன்றைய நற்செய்தியில் ஒரு முறை அல்ல, இரு முறை கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளவற்றை நற்செய்தியிலிருந்து கேட்போம்:

லூக்கா நற்செய்தி 14: 28-32

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

ஆர அமர சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும் என்பதை, கோபுரம் கட்டுதல், போருக்குப் புறப்படுதல் என்ற எடுத்துக்காட்டுகளுடன் கூறும் இயேசு, திடீரென, சற்றும் எதிர்பாராத ஒரு கருத்தையும் கூறுகிறார். அதுதான், இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் கூறும் ஒரு திருப்பம். "அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டு விடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14: 33) இதை நாம் வாசிக்கும்போது, யாரோ நம் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து நம்மை எழுப்புவதைப்போல் உணர்கிறோம்.

இயேசு பயன்படுத்திய 'அப்படியே' என்ற வார்த்தைதான் முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர் போல் இருக்கிறது. 'அப்படியே' என்று இயேசு குறிப்பிடுவது எதை? அதற்கு முன் அவர் கூறிய அந்த இரு எடுத்துக்காட்டுகளை... இயேசு கூறுவது இதுதான்... எப்படி திட்டமிட்டு கோபுரம் எழுப்புவீர்களோ, எப்படி திட்டமிட்டு போருக்குச் செல்வீர்களோ, அப்படியே தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும், என் சீடராய் இருக்க முடியாது என்பதுதான் இயேசு விடுக்கும் சவால். இந்த வாக்கியத்தை ஆழமாகச் சிந்தித்தால், இயேசு, இந்த வரிகளில் ஓர் உண்மைச் சீடனுக்குரிய சவாலை முன்வைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு கோபுரம் கட்டுபவர், இரவும் பகலும் அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார். ஒரு போருக்குச் செல்பவர், அதேபோல், அல்லது, அதைவிட இன்னும் தீவிரமாக எண்ணமும், துணிவும் கொண்டிருப்பார். இயேசுவைப் பின் தொடர்வதிலும் இரவும் பகலும் தீவிர எண்ணம் வேண்டும், துணிவு வேண்டும் என்பதைத்தான் அந்த 'அப்படியே' என்ற வார்த்தை சொல்கிறது. அந்த வார்த்தைதான் முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரைப்போல் நம்மை விழித்தெழச் செய்கிறது.

ஒரு சீடராக இயேசுவைப் பின்பற்றுவதென்பது, ஏதோ ஓரிரவில் தோன்றி மறையும் அழகான, இரம்மியமான கனவு அல்ல. மாறாக, வாழ்நாள் முழவதும், இரவும், பகலும், நம் சிந்தனை, சொல், செயல் இவற்றை நிறைக்கவேண்டிய ஒரு தாகம் என்பதைத்தான், இயேசு, இவ்வரிகளில் சொல்லியிருக்கிறார்.

பணத்திற்காக, புகழ், பெருமைகளுக்காக, ஏதோ ஒன்றைச் சாதிக்கவேண்டும் என்பதற்காக, தூக்கம் மறந்து, உணவை மறந்து, குடும்பத்தை மறந்து, உழைக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். தாங்கள் ஆரம்பித்ததை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பதில் அவர்கள் கொண்டுள்ள தீவிரத்தை, தன் சீடர்கள் கொண்டிருக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.

இறுதியாக ஓர் எண்ணம்... இந்த எண்ணம் உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம்; உங்களுக்குச் சவாலாக அமையலாம். இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் எல்லாம், குருக்கள், துறவறத்தாருக்கு என்று எண்ணி, தப்பித்துக் கொள்ளமுடியாது. இயேசு, இந்த வார்த்தைகளை, தன் சீடர்களுடன் தனித்து இருக்கும்போது சொல்லவில்லை... மாறாக, தன்னைப் பின்தொடர்ந்த ‘பெருந்திரளான மக்களை’ நோக்கி, அதாவது, நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார். தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்கள், அதிலும் குறிப்பாக, இரவும் பகலும் தீர ஆய்வு செய்து, தியாகம் செய்யத் துணியாத உள்ளங்கள், தன்னைப் பின்தொடர்வது இயலாது என்று கூறும் இயேசுவுக்கு நமது பதில் என்ன?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.