2016-09-03 17:18:00

நற்செய்தி அறிவிப்பு பேராயம் : புதிய ஆயர்களுக்கு கருத்தரங்கு


செப்.03,2016. கடந்த இரண்டு ஆண்டுகளில், உலக அளவில் ஆயர்களாக நியமனம் பெற்ற 94 ஆயர்களுக்கு, உரோம் நகரில், கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம்.

இக்கருத்தரங்கில், ஆப்ரிக்காவின் 19 நாடுகளிலிருந்து 42, ஆசியாவின் 9 நாடுகளிலிருந்து 36,  அமெரிக்காவின் 9 நாடுகளிலிருந்து 12, ஓசியானியாவின் 2 நாடுகளிலிருந்து 4 என, கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக நியமனம் பெற்ற ஆயர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தங்களின் ஆயர் பணியையும், வாழ்வையும், உரையாடல் மற்றும் செபத்தின் வழியாக, ஆழப்படுத்தும் நோக்கத்தில், 1994ம் ஆண்டிலிருந்து, புதிய ஆயர்களுக்கு, இத்தகைய கருத்தரங்கை நடத்தி வருகின்றது நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம்.

உரோம் புனித பவுல் கல்லூரியில், செப்டம்பர் 5ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடைபெறும் இக்கருத்தரங்கில், பல்வேறு உரைகளும், நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

செப்டம்பர் 9ம் தேதி வெள்ளியன்று இந்த ஆயர்கள் திருத்தந்தையைச் சந்திப்பார்கள். 11ம் தேதி அசிசிக்குத் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கில் திண்டுக்கல் ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களும் கலந்துகொள்கிறார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.