2016-09-01 16:37:00

இளையோரில் பரவியுள்ள வன்முறையைப் புரிந்துகொள்ள அழைப்பு


செப்.01,2016. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகளையும், இவை இளையோர் மத்தியில் பரவியுள்ள முறையையும் இந்திய அரசு புரிந்துகொள்ளுமாறு, சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

டெல்லி பேராயர் அனில் கூட்டோ உட்பட, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஏறத்தாழ ஐம்பது தலைவர்கள் புதுடெல்லியில் இவ்வாரத்தில் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு கேட்டுள்ளனர்.

சமய நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய அமைதி நிறுவனம் நடத்திய இக்கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் அனில் கூட்டோ அவர்கள், இளையோர் தங்களை, வன்முறைச் செயல்களுக்கு அர்ப்பணித்திருப்பதன் உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார்.

உலகளாவிய அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்திருக்கின்ற இந்தச் சமயத் தலைவர்கள் குழுவில் ஒருவரான பேராயர் அனில் கூட்டோ அவர்கள், நாட்டில் அமைதியைக் கொண்டு வருவதற்கு, அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக, சமயத் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீரில், பிரிவினைவாத புரட்சிக்குழுத் தலைவர் புர்கான் வானி அவர்கள், கடந்த ஜூலை 8ம் தேதி கொல்லப்பட்டார். இதையொட்டி இடம்பெற்ற வன்முறையில் குறைந்தது 75 பேர் இறந்துள்ளனர் மற்றும் பத்தாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இவ்வன்முறையை முன்னிட்டு, விதிக்கப்பட்ட 51 நாள் ஊரடங்குச் சட்டம், ஆகஸ்ட் 30ம் தேதி நீக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.