2016-08-31 16:18:00

கொலம்பிய அமைதி ஒப்பந்தம் திருத்தந்தைக்கு திருப்தி


ஆக.31,2016. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக்குழுவுக்கும் இடையே இடம்பெற்றுள்ள அமைதி ஒப்பந்தம் தனக்கு திருப்தியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு ஆண்டுகளாக இடம்பெற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, எட்டப்பட்டுள்ள இம்முடிவு குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களின் ஒளியில், கொலம்பிய நாட்டினர் அனைவரும், அமைதி மற்றும் ஒப்புரவை அடையும் இலக்கிற்கு, தனது ஆதரவு தொடர்ந்து இருக்கும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இந்த ஆதரவைத் தெரிவிக்கும் இவ்வறிக்கையை, திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

கொலம்பிய அரசுக்கும், மார்க்சீய புரட்சியாளர்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற சண்டையில், இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த அமைதி ஒப்பந்தம், வருகிற அக்டோபர் 2ம் தேதி அமலுக்கு வரும் என, கொலம்பிய அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ் அவர்கள் அறிவித்துள்ளார் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.