2016-08-31 15:38:00

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்க புதிய துறை


ஆக.31,2016. ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கு, திருப்பீடத்தில் இப்புதனன்று புதிய துறை ஒன்றை உருவாக்கி, அதன் தலைவராக, கர்தினால் Peter Kodwo Appiah Turkson அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை மக்களின் தேவைகளுக்கு, சிறந்த விதத்தில் சேவையாற்றுவதற்கு உதவியாக, இப்புதிய துறையை, Motu Proprio அதாவது தனது சுய விருப்பத்தின்பேரில் என்ற புதிய திருத்தூது கடிதத்தின் வழியாக உருவாக்கியுள்ளார் திருத்தந்தை.

இத்துறையை தான் உருவாக்கியதன் நோக்கம் பற்றி அதில் விளக்கியுள்ள திருத்தந்தை, திருஅவை, தனது இருப்பு மற்றும் செயல்களால், நற்செய்தியின் ஒளியில், மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வளர்ச்சி, நீதி, அமைதி மற்றும், படைப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதன் வழியாக இடம்பெறுகின்றது என்றும் கூறியுள்ளார்.

திருத்தூதர் பேதுருவின் வழிவரும் திருத்தந்தை, நீதி, அமைதி, படைப்பைப் பாதுகாத்தல் ஆகிய விழுமியங்களை, தனது பணியில், உறுதிப்படுத்துவதற்கு, தன்னோடு ஒத்துழைக்கும் துறைகளை நிறுவுகிறார் என்றும், திருத்தந்தையின் திருத்தூது கடிதம் கூறுகிறது.

இப்புதிய துறைக்கு வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி செயல்படும் இது, ஒரு பரிசோதனை முறையாக, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, திருப்பீட கோர் ஊனும் அவை, திருப்பீட குடியேற்றதாரர்க்கு மேய்ப்புப்பணி அவை, திருப்பீட நலவாழ்வு அவை ஆகிய நான்கையும் ஒன்றிணைத்து, இப்புதிய துறை இயங்கும் எனவும் அத்திருத்தூது கடிதம் கூறுகிறது.

மேலும், திருப்பீடச் சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை கூறும் கர்தினால்கள் அவையின் பரிந்துரையின்படி, இப்புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இது, 2017ம் ஆண்டு சனவரி முதல் நாள் செயல்படத் தொடங்கும் எனவும், திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்தது. 

திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவராகப் பணியாற்றி வருகின்ற கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், 2009ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி, இத்துறைக்குத் தலைவராக, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் நியமித்தார். 

ஆப்ரிக்காவின் கானா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், 2003ம் ஆண்டில் புனித  திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

1948ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பிறந்த இவர், கானா நாட்டின் Cape Coast உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயருமாவார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.