2016-08-31 15:30:00

இது இரக்கத்தின் காலம்.. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு நியாயம்


வேட்டைக்காரர் ஒருவர் இரண்டு நாய்கள் வைத்திருந்தார். அவற்றில் ஒரு நாய் அவருடன் வேட்டைக்குச் சென்றுவரும். மற்றொரு நாய் அவரது வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். வேட்டைக்காரர் வேட்டைக்குச் சென்று திரும்பியதும், வேட்டையில் கிடைத்தவற்றில் வீட்டு நாய்க்கே அதிகமாகக் கொடுப்பது வழக்கம். வேட்டை நாய் நீண்ட நாள்வரை அதைப் பொருட்படுத்தாமல் இருந்தது. ஒருநாள் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வேட்டைக்காரர் வழக்கம்போல் செய்தார். அதைக் கண்டு வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து, "வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா?  நீ அந்தத் துன்பத்தில் பங்கு கொள்ளவில்லை. ஆனால், நான் வேட்டையில் சம்பாதித்தவற்றில் மட்டும் பெரும் பகுதியைப் பங்காகப் பெற்றுக் கொள்கிறாய். இது முறையா? இது நியாயமா? உனக்கே இது நல்லதாகத் தெரிகிறதா?'' என்று வருத்தத்துடன் கேட்டது. அதைக் கேட்ட வீட்டு நாய் மெல்லச் சிரித்துக் கொண்டே, "நண்பனே! அது என்னுடைய குற்றம் இல்லை. நீ என்மீது வருத்தப்படுவதில் பயனில்லை. இந்தக் குற்றம் நம் முதலாளியுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித் தரவில்லை. வேட்டையாடுவதில் என்னைப் பழக்கவுமில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்துப் பழக்கியிருக்கிறார்!'' என்று பதில் கூறியது.

அதைக் கேட்டதும், வேட்டை நாயினால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு நியாயம் இருப்பதை அது புரிந்து கொள்ள முயற்சித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.