2016-08-30 14:37:00

இது இரக்கத்தின் காலம் : அன்புப்பணிக்கு அரியணை


உரோமையில் இறையியல் ஆசிரியராகப் பணியாற்றும் ஜான் புல்லன்பாக் (John Fullenbach) என்ற அருள்பணியாளர், அன்னை தெரேசா உயிரோடிருந்தபோது, கொல்கத்தா சென்று, அன்னையுடன் பணி செய்ய விரும்பினார். அன்னையும் அழைப்பு விடுத்தார். தன் பணியை ஆரம்பித்த முதல் நாள், ஓர் அருட்சகோதரியுடன், கொல்கத்தாவின் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதிக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது. அப்பகுதியில், உடல் நலம் மிகவும் நலிந்த ஒரு வயதானப் பெண்மணி அவர்களை அணுகி, "தயவு செய்து என் வீட்டுக்கு வாருங்கள். என் கணவர் சாகக் கிடக்கிறார்" என்று வேண்டினார். அப்பெண்மணியைத் தொடர்ந்து, அருள்பணி ஜானும், அந்த சகோதரியும், ஒரு குடிசைக்குள் சென்றனர். அங்கே, பல நாட்கள் படுக்கையில் இருந்த ஒரு மனிதரைக் கண்டனர். ஜானுக்குப் பெரிய அதிர்ச்சி. இவ்வளவு மோசமான நிலையில் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று... அவ்வளவு நாற்றம் அங்கே. அவரை தங்கள் இல்லத்திற்கு கொண்டு செல்லலாம் என்று சகோதரி கூறியதும், இருவரும் குனிந்து அவரைத் தூக்க முயன்றபோது, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மனிதர், அச்சகோதரியின் முகத்தில் எச்சில் துப்பினார். அதிர்ச்சி, கோபம் எல்லாம் ஜானைத் தாக்கின. அச்சகோதரியோ, எச்சிலைத் துடைத்துவிட்டு, தன் பணிகளில் மூழ்கின்றார். ஓரளவு சமாளித்துக்கொண்டு, அந்த மனிதரை அன்னையின் இல்லத்திற்கு கொண்டு போய் சேர்த்தனர். தொடர்ந்து அங்கே தங்கிய நாட்களில், ஜான் அனுபவித்த அதிர்ச்சிகள் பல உண்மைகளைச் சொல்லித்தந்தன. அவரது விசுவாசத்தை உறுதிபடுத்தின.

அன்னை தெரேசாவும், பிற சகோதரிகளும் செய்த பணி, அவரை அதிகமாய்ப் பாதித்தது. அதைவிட, அந்த நோயாளிகளில் சிலர், சகோதரிகள் மீதும், அன்னை மீதும் கோபப்பட்டு, பேசிய வார்த்தைகள், நடந்து கொண்ட விதம், அவற்றை அச்சகோதரிகள் சமாளித்த அழகு, இவை அனைத்தும், தன் விசுவாச வாழ்வை ஆழப்படுத்தியதாகக் கூறுகிறார், அருள்பணி ஜான் புல்லன்பாக்.

இவ்விதம் பணியாற்றக்கூடிய அருள்சகோதரிகள் குழுமத்தை உருவாக்கி, புனிதர் என்ற நிலையை விரைவில் அடையவிருக்கும் அருளாளர் அன்னை தெரேசா, பலகோடி மக்கள் மனதில் அரியணை கொண்டிருக்கிறார் என்பது உறுதி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.