2016-08-30 14:57:00

ஆகஸ்ட் 30, கந்தமால் மறைசாட்சிகள் தினம்


ஆக.30,2016. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக, ஆகஸ்ட் 30, இச்செவ்வாயன்று நாடெங்கும் கிறிஸ்தவர்கள், மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடித்தனர்.

மேலும், 2008ம் ஆண்டில், கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இந்துத் தீவிரவாதிகள் நடத்திய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்க்கு நீதி கேட்டு, ஆகஸ்ட் 27, கடந்த சனிக்கிழமையன்று பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.

2008ம் ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி, இந்துமதத் தலைவர் சுவாமி லக்ஷமானந்தா சரஸ்வதி மற்றும் அவரோடு சேர்ந்த நால்வர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து, கந்தமாலில் தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில், 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில், பெண்கள், சிறார், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏறத்தாழ நூறு பேர் இறந்தனர். 

ஏறத்தாழ 350 ஆலயங்களும், 6,500 வீடுகளும் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. ஓர் அருள்சகோதரி உட்பட, பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.