2016-08-29 15:26:00

நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதிகளுக்கு விரைவில் திருத்தந்தை


ஆக.29,2016. கடந்த வாரத்தில், இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தான் பார்வையிடும் திட்டத்தையும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பகுதிகளுக்கு, எவ்வளவு விரைவில் செல்ல இயலுமோ அவ்வளவு விரைவில் செல்லவிருப்பதாகவும் கூறிய திருத்தந்தை, இதில் பாதிக்கப்பட்டுள்ள நம் அன்பு மக்களின் துன்பங்களையும், கவலைகளையும் திருஅவையும் பகிர்ந்துகொள்கின்றது என்றும் கூறினார்.

இத்தாலியில் நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லாட்சியா, மார்க்கே மற்றும் உம்ப்பிரியா பகுதி மக்களுடன் தான் கொண்டுள்ள ஆன்மீக ஒருமைப்பாட்டை மீண்டும் தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைத்து விசுவாசிகளையும் செபிக்குமாறு விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் நிவாரணப் பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டும் தெரிவித்தார்.

வேதனை நிறைந்த சோதனைகளை மக்கள் மேற்கொள்வதற்கு, ஒருமைப்பாட்டுணர்வு எவ்வளவு முக்கியமானது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இத்தாலியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 300 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.