2016-08-22 16:20:00

கொல்கத்தா பேராயர் இல்லத்தில் அன்னை தெரேசா திருவுருவச் சிலை


ஆக.,22,2016.  கொல்கத்தாவிலுள்ள மசெதோனியா துணைத் தூதரகத்தால் கொடையாக வழங்கப்பட்டுள்ள அன்னை தெரேசா ஆளுயர வெண்கல சிலை, கொல்கத்தா பேராயர் இல்லத்தில் நிறுவப்பட உள்ளது.

அன்னை தெரேசாவின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளான இம்மாதம் 25ம் தேதி, ஒரு சிறப்பு வைபவத்தில், இந்த வெண்கலச் சிலை, ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் திரு உருவச் சிலைக்கருகே நிறுவப்படும் என்றார் பேராயர் தாமஸ் டி சூசா.

1910ம் ஆண்டு அன்னை தெரேசா, தற்போதைய மசதோனியா குடியரசின் தலைநகரில் அல்பேனிய பெற்றோருக்குப் பிறந்தார்.

தங்கள் நாட்டில் பிறந்தவரைக் கௌரவிக்கும் விதமாக மசெதோனியாவின் கொல்கத்தா துணை தூதரக அதிகாரி Namit Bajoria அவர்கள், அன்னை தெரேசா வெண்கலச் சிலையை கொல்கத்தா மறை மாவட்டத்திற்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

ஆதாரம் :  UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.