2016-08-20 14:29:00

செப்.11 ஸ்கோப்ஜே நன்றி விழாவில் திருத்தந்தையின் பிரதிநிதி


ஆக.20,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், புனிதர்நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், தனது பிரதிநிதியாகக் கலந்துகொள்வதற்கு, சரயோவோ பேராயர் கர்தினால் வின்கோ புலியெச் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை தெரேசா அவர்கள் பிறந்த, தற்போதைய மாசிடோனியா நாட்டின் ஸ்கோப்ஜே நகரில், வருகிற செப்டம்பர் 11ம் தேதி நடைபெறவிருக்கும் நன்றி விழாவை, திருத்தந்தையின் சார்பில், போஸ்னியா-எர்செகொவினா நாட்டுக் கர்தினால் புலியெச் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

வருகிற செப்டம்பர் 4ம் தேதி, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படுவார்.

முன்னாள் யுக்கோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிடோனியா நாட்டில், ஸ்கோப்ஜே என்ற நகரில், 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்தார் அன்னை தெரசா. 45 ஆண்டுகள் ஆண்டுகள் கொல்கத்தா வீதிகளில் பணியாற்றிய இவர், 1997ம் செப்டம்பர் 5ம் தேதி இறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.