2016-08-19 15:17:00

செப்டம்பர் 20, அசிசியில் மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ்


ஆக.19,2016. “அன்பு எங்கே உள்ளதோ, அங்கே, புரிந்துகொள்ளுதலும், மன்னிப்பும் இருக்கும்” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறவிருக்கும், அமைதிக்காகச் செபிக்கும் உலக நாளில் கலந்து கொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 20ம் தேதி, அந்நகருக்குச் செல்வார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

அமைதிக்காகச் செபிக்கும் உலக நாளின் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, புனித பிரான்சிஸ் பிறந்த அசிசி நகரில், உரோம் சான் எஜிதியோ குழு, இந்தச் செப நிகழ்வை நடத்துகிறது. மேலும், இக்குழு, ஒவ்வோர் ஆண்டும், அமைதிக்காகச் செபிக்கும் உலக நாளை, அசிசி நகரில் நடத்தி வருகிறது.

அசிசியின் மன்னிப்பு இடம்பெற்ற 800ம் ஆண்டு நிறைவையொட்டி, இந்த ஆகஸ்ட் 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசிக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, புனித பிரான்சிஸ் அவர்கள் எழுப்பிய, Porziuncola சிற்றாலயத்தில் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 20ம் தேதி, அசிசி செல்வதற்கு, இசைவு தெரிவித்திருப்பது குறித்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் சான் எஜிதியோ குழுவின் தலைவர் Marco Impagliazzo.

வருகிற செப்டம்பர் 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை, அமைதியின் தாகம் என்ற தலைப்பில், அசிசியில், சான் எஜிதியோ குழு, உலக கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது. இதன் நிறைவு நாளில், அதில் திருத்தந்தை கலந்து கொண்டு, சமயத் தலைவர்களுடன் உலகின் அமைதிக்காகச் செபிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.