2016-08-19 15:57:00

அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட விழாவுக்கு இலச்சினை


ஆக.19,2016. வருகிற செப்டம்பர் 4ம் தேதி, வத்திக்கானில் நடைபெறவிருக்கின்ற, அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட விழாவின் அதிகாரப்பூர்வ இலச்சினையை மும்பை கத்தோலிக்கர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

மும்பை புறநகர்ப் பகுதியிலுள்ள, மஹிம் புனித வெற்றி அன்னை மரியா பங்கைச் சேர்ந்த Karen D'Lima Vaswani அவர்கள், இந்த இலச்சினையை உருவாக்கியுள்ளார்.

இந்த இலச்சினையை உருவாக்கியது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ள Karen D'Lima அவர்கள், தான் ஒருபோதும் அன்னை தெரேசாவைச் சந்தித்தது கிடையாது, ஆயினும், அவரின் பிறரன்புப் பணியைத் தான் எப்போதும் வியந்து, அதில் தன்னை ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட விழாவுக்கு, வத்திக்கான் வழங்கியுள்ள கருப்பொருளின் அடிப்படையில், இறைவனின் கனிவையும், அவரின் இரக்கமுள்ள அன்பையும் எடுத்துச் செல்பவராக, அன்னை தெரேசா அவர்களைச் சித்தரித்திருப்பதாகக் கூறியுள்ளார் Karen D'Lima.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.