2016-08-15 15:40:00

காங்கோ குடியரசின் வட கிவு மாநிலத்திற்கு திருத்தந்தை செபம்


ஆக.15,2016. அண்மையில் படுகொலைகளால் பாதிக்கப்பட்டுள்ள, காங்கோ குடியரசின் வட கிவு மாநிலத்தில், நல்லிணக்கம் நிலவ, இத்திங்களன்று, மூவேளை செப உரையின் இறுதியில் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல பகுதிகளில், தொடர்ந்து இடம்பெறும் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் துன்பங்களையும், ஏக்கங்களையும், இன்று நாம் தியானிக்கும் அமைதியின் அரசியாம், அன்னை மரியாவிடம்  அர்ப்பணிக்கின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை.

அண்டை நாடுகளில் இடம்பெறும் ஆயுத மோதல்களால், காங்கோ குடியரசின் வட கிவு மாநிலத்தின் கிழக்குப் பகுதி, நீண்ட காலமாக வன்முறையால் நிறைந்துள்ளது. இங்கு, கடந்த வார இறுதியில் இடம்பெற்ற படுகொலை நடவடிக்கையில், குறைந்தது நாற்பது பேர் இறந்தனர்.

இப்பகுதி மக்கள் அனைவரும் புரிந்துணர்வையும், நல்லிணக்க வாழ்வையும் பெறவும், அன்னை மரியா உதவுவாராக என்றும் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.