2016-08-06 16:51:00

புலம்பெயர்ந்தோர் ஒலிம்பிக் குழுவுக்கு திருத்தந்தை வாழ்த்து


ஆக.06,2016. பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோராக வெளியேறி, தற்போது ஒரே குழுவாக, ஐ.நா. கொடியின் கீழ், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தன் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த விளையாட்டு வீரர்களின் பெயர்களை தன் செய்தியில் தனித்தனியே குறிப்பிட்டு,  வாழ்த்தினை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அவ்விளையாட்டு வீரர்களின் குழு குறித்து, தான் பல விவரங்களை படித்து அறிந்ததாகவும், அவர்களின் நேர்காணல்கள் பலவற்றை படித்ததாகவும், அதன் வழியாக அவர்களின் வாழ்வு மற்றும் ஏக்கங்களுக்கு நெருக்கமாக தன்னால் இருக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா. கொடியின் கீழ் விளையாட உள்ள இந்த வீரர்களின் திறமையும் பலமும் நன்முறையில் வெளிப்படுத்தப்பட்டு, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் குரலாக ஒலிக்கும் என்ற நம்பிக்கையையும் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.

அமைதி என்பது இயலக் கூடியது என்பதை இந்த புலம்பெயர்ந்தோர் விளையாட்டு வீர்ர்கள் வழியாக உலகம் உணர்ந்து கொள்வதுடன், அவர்களின் அனுபவங்கள் நமக்கு சாட்சியாக உதவட்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.