2016-08-05 15:05:00

திருத்தந்தையின் அசிசி பயணத்திற்கு Umbria ஆயர்கள் நன்றி


ஆக.05,2016. திருப்பயணிகள் மத்தியில் தன்னையும் ஒரு திருப்பயணியாக மாற்றி, அசிசி நகருக்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, Umbria ஆயர் குழுமம் நன்றி கூறி ஒரு செய்தியை அனுப்பியுள்ளது.

கடந்த 800 ஆண்டுகளாக இறைவனின் மன்னிப்பை பறைசாற்றிவரும் Porziuncula சிற்றாலயத்தை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், மக்களின் மனதில் மீண்டும் பதித்த திருத்தந்தைக்கு ஆயர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணகத் தூதர்களின் புனித மரியா பசிலிக்காவுக்கு வருகை தந்தபோது, அங்கு, அசிசி நகர் காரித்தாஸ் அமைப்பினரால் பராமரிக்கப்படும் புலம் பெயர்ந்தோரும் வந்திருந்தது, Umbria பகுதியின் குடும்ப உணர்வைக் காட்டும் ஓர் அடையாளமாக அமைந்தது என்று, ஆயர்களின் செய்தி கூறிபுள்ளது.

இறைவனுக்கும், மனிதருக்கும் உகந்த ஓர் உலகைப் படைப்பதற்கு, இரக்கம், மன்னிப்பு என்ற பண்புகள் மட்டுமே உதவ முடியும் என்பதை, இப்பயணத்தின் வழியே மீண்டும் நினைவுறுத்தியதற்காக, திருத்தந்தைக்கு Umbria பகுதியின் ஆயர்கள் நன்றி கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.