ஆக.05,2016. இந்தியாவின் பீஹார், மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்கள் மத்தியில் இந்திய காரித்தாஸ் அமைப்பு, துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.
இப்பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளத்தில், இதுவரை, 150 பேர் இறந்துள்ளனர் என்றும், 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைவிட்டு அகற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள ஒரு சில கிராமங்களுக்கு படகுகள் மட்டுமே செல்லமுடியும் என்பதால், துயர் துடைப்புப் பணிகள் தாமதமாகின்றன என்று, காரித்தாஸ் பணியாளர், ஷாலினி அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.
இந்தியாவின் பல பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளத்தைப் போலவே, நேபாளத்திலும், சீனாவின் பல பகுதிகளிலும் வெள்ளத்தின் பாதிப்புக்கள் கூடி வருகின்றன என்றும், மழை இன்னும் பல நாட்கள் நீடிக்கும் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |