2016-08-03 15:16:00

அசிசி பயணம் - செபத்தில் இணைய திருத்தந்தை விண்ணப்பம்


ஆக.03,2016. ஆகஸ்ட் 4, இவ்வியாழனன்று அசிசி நகருக்கு தான் மேற்கொள்ளும் திருப்பயணத்தின்போது, அனைவரும் தன்னோடு செபத்தில் இணையவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

அசிசி நகரில், வானதூதர்களின் அன்னை மரியா பசிலிக்காவில் அமைந்துள்ள Porziuncola சிற்றாலயத்தில், 1216ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இயேசுவும், அன்னை மரியாவும் அசிசி நகர் புனித பிரான்சிஸுக்குத் தோன்றி, பாவமன்னிப்பு குறித்து சிறப்பான வரங்களை அளித்தனர் என்பது மரபு.

பரிபூரண பலனை மையப்படுத்தி வழங்கப்பட்டு வரும் இந்த மரபின் 8ம் நூற்றாண்டு நினைவு, ஆகஸ்ட் 2ம் தேதி சிறப்பிக்கப்பட்டதையொட்டி, இந்தச் சிற்றாலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று திருப்பயணம் மேற்கொள்கிறார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், தனிப்பட்ட முறையில் தான் மேற்கொள்ளும் இப்பயணத்தில், மக்கள் தன்னுடன் செபத்தில் இணையவேண்டும் என்று, இப்புதன் மறைக்கல்வி உரைக்குப் பின் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

மேலும், பங்கு அருள் பணியாளர்களின் பாதுகாவலர் என்று கொண்டாடப்படும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் திருநாள் இவ்வியாழனன்று கொண்டாடப்படுவதை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, அப்புனிதரின் பணிவுள்ள மனதை அனைவரும் பெறுவதற்கு முயலவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் :  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.