2016-08-02 16:05:00

போலந்து கர்தினால் Macharski இறைபதம் சேர்ந்தார்


ஆக.,02,2016. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகர் முன்னாள் பேராயர் கர்தினால் Franciszek Macharski அவர்கள், இச்செவ்வாய்க்கிழமை காலை இறைபதம் சேர்ந்தார்.

கர்தினாலின் மறைவு குறித்து, போலந்து விசுவாசிகளுக்கும், திருஅவைத் தலைவர்களுக்கும், மறைந்த கர்தினாலின் உறவினர்களுக்கும், தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, கிரக்கோவின் தற்போதைய பேராயர் கர்தினால், ஸ்தனிஸ்லாவ் ஜீவிச் அவர்களுக்குத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கிரக்கோவ் பெருமறைமாவட்டத்தை 2005ம் ஆண்டுவரை வழி நடத்திச் சென்ற கர்தினால் மக்சார்ஸ்கியின் அர்ப்பண வாழ்வு குறித்து இத்தந்திச் செய்தியில் தன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

கர்தினாலின் ஆன்ம இளைப்பாற்றிக்கு செபிப்பதாக உறுதிகூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அண்மைத் திருப்பயணத்தின்போது, கடந்த வியாழனன்று, கிரக்கோவ் மருத்துவமனையில் நோயுற்றிருந்த கர்தினால் Macharski அவர்களை நேரில் சென்றுப் பார்த்து, அவருக்காக செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

89 வயது நிரம்பிய கர்தினால் Macharski அவர்களின் மறைவோடு, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 211 ஆக குறைந்துள்ளது, இதில் 112 பேர், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.