ஜூலை,25,2016. "நற்செய்தியின் ஒளியில் ஆப்ரிக்கக் குடும்பங்கள், நேற்றும் இன்றும் நாளையும்" என்ற தலைப்பில் இம்மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆப்ரிக்க கண்டத்தின் ஆயர்கள், நம்பிக்கை மற்றும் ஒருமைப்பாட்டின் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குடும்பம் மற்றும் திருமணத்தின் முக்கியத்துவம், மற்றும், அழகு குறித்து தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள ஆயர்கள், குடும்பங்களை பாதுகாப்பது என்பது சமூகத்திற்கு ஆற்றும் மிகப்பெரும் சேவையாகும் எனக் கூறியுள்ளனர்.
மணமுறிவு, மற்றும் ஒரே பாலினத் திருமணங்கள், திருஅவையால் ஏற்றுக்கொள்ளப் படாதவை என்பதைச் சுட்டிக்காட்டும் ஆயர்கள், இன்றைய சமூகத்தில் காணப்படும் ஏழ்மை, கருக்கலைப்பு, பலதார மணம், வரதட்சணை, பில்லிசூனியத்தில் நம்பிக்கை, போர், குடும்பச் சிக்கல்கள் என, பல்வேறு வகைகளில் குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கு திருஅவை மேய்ப்புப்பணி அக்கறையுடன் சேவையாற்ற வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திருமணம் என்பது, அன்பு மற்றும் மகிழ்வின் சமூகம் எனும்போது, குடும்பம் என்பது வாழ்வின் திருக்கோவில் எனவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
குடும்பங்களின் வருங்கால வாழ்வே, திருஅவைப்பணியின் இதயமாக உள்ளது, ஏனெனில், குடும்பம் என்பது இறைவனின் இரக்கம் நிறைந்த அன்பின் கொடை என மேலும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ள ஆப்ரிக்க ஆயர்கள், குடும்பங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பே, நம் சமூகங்களின் வருங்காலத்தை உறுதிச் செய்கின்றது என தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |