2016-07-23 15:23:00

தொல்பொருள் ஆய்வுகள் எண்ணெய்யைவிட மதிப்புமிக்கவை


ஜூலை,23,2016. ஈராக்கில், சில தொல்பொருள் மற்றும் இயற்கையாக அமைந்த பாரம்பரிய இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து தனது மகிழ்வையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் முதுபெரும் தந்தை இரஃபேல் லூயிஸ் சாக்கோ.

யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில், புதிதாக இணைக்கப்பட்டுள்ள மூன்று தொல்பொருள் மற்றும் நான்கு இயற்கையாக அமைந்த பாரம்பரிய இடங்களின் ஒரு பகுதி, ஏடன் விவிலியத் தோட்டம் அமைந்திருந்த பகுதியில் உள்ளது என்று கூறியுள்ளார், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை சாக்கோ.

ஈராக் நாட்டிற்கு, அமைதியும், உறுதியான தன்மையும் அவசியம் என்று கூறி, ஈராக்கியர்கள் இந்தப் பாரம்பரியச் சொத்துக்களைப் பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில், உலகப் பாரம்பியச் சொத்து குழு நடத்திய 40வது அமர்வில், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, 21 புதிய இடங்களை இணைத்துள்ளது. இதில், ஈராக்கில், கல்தேயர்களின் Ur,  Eridu, Uruk ஆகிய மூன்று இடங்களும் உள்ளடங்கும். இவை கி.மு. 3ம், 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த, சுமேரிய நகரங்களின் எஞ்சிய பகுதிகளாகும். 

இது குறித்துப் பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இவை, வருங்காலத் தலைமுறைகள் சுற்றுலாக்களை ஊக்குவிக்க உதவும் என்றும், தொல்பொருள் அறிவியல் ஆய்வுகள், எண்ணெய்யைவிட மதிப்புமிக்கவை என்றும் கூறினார்.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.