2016-07-23 15:13:00

ஆப்கானில் கடத்தப்பட்ட இந்திய தன்னார்வலப் பணியாளர் மீட்பு


ஜூலை,23,2016. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடத்தப்பட்ட இந்திய கத்தோலிக்கப் பெண் தன்னார்வலப் பணியாளர் ஜூடித் டி சூசா அவர்கள், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதை, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்..

கடந்த ஓராண்டாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஆகா கான் அறக்கட்டளையில் பணியாற்றி வந்த நாற்பது வயது நிரம்பிய ஜூடித் அவர்கள், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி, தலைநகர் காபூலில், துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டார்.

இது தொடர்பாக, இச்சனிக்கிழமை அதிகாலை சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜூடித் டி சூசா அவர்கள் நம்முடன் இருக்கிறார், அவர் பத்திரமாக, நல்ல நிலையில் உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மீட்கப்பட்ட ஜூடித், காபூலில் இந்திய தூதரகத்தில் இருப்பதாகவும், அவர் இச்சனிக்கிழமை மாலையில் இந்தியா திரும்புகிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

ஜூடித் மீட்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவரது சகோதரர் ஜெரோம் டி சூசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், "எனது சகோதரி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திய அரசுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் விடாமுயற்சியின் காரணமாகவே ஜூடித் மீட்கப்பட்டுள்ளார்" என்றார்.

ஜூடித்தின் தந்தை டென்ஸல், தாய் லாரன்ஸ், சகோதரி ஆக்னஸ் ஆகியோரும், மகிழ்ச்சியுடன் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜுடித், கடந்த ஓராண்டாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஆகா கான் அறக்கட்டளையில் பணியாற்றி வந்தார். இதற்குமுன் பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் கொல்கத்தா மற்றும் டெல்லியில் பணியாற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தானைப் புனரமைக்க இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில், இந்திய அமைப்புகள் கடந்த காலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.