2016-07-21 15:37:00

மீனவர் பாதுகாப்பு கருவி கண்டுபிடிப்பு: சென்னை மாணவர் விருது


ஜூலை,21,2016. தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்வே ரமேஷ் என்ற பள்ளி மாணவர், மீனவர்கள் பாதுகாப்புக்காக நவீன கருவியொன்றை வடிவமைத்ததற்காக, அவருக்கு, கூகுள் சமுதாய விருது (Google Community Impact Award) கிடைத்துள்ளது.

சுற்றுச்சூழல், நலவாழ்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சமூக நோக்குடைய சிறந்தத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் சமுதாய விருது வழங்கப்படுகிறது.

சென்னை கோபாலபுரம் நேஷனல் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவர் அத்வே ரமேஷ் (14). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் ஒரு நவீன கருவியை (Fishermen Lifeline Terminal-FELT) இவர் உருவாக்கி உள்ளார். கையடக்கமான இக்கருவியைப் பயன்படுத்தி, கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் 50 ஆயிரம் டாலர் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள 20 பேரில் ஒருவராகவும் அத்வே ரமேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் விருது கிடைத்திருப்பது குறித்து ரமேஷ் கூறும்போது, “மீனவர்கள் கடலில் எத்தனையோ நாட்கள் தங்கி கஷ்டப்படுகிறார்கள். சில நேரங்களில் எல்லையை தாண்டிவிட்டதாகக் கூறி இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். கடலில் மீன் பிடிக்கும்போது அவர்களின் இருப்பிடம் குறித்தத் தகவல்கள் தெரியவந்தால், எதிர்பாராத சூழல்களை கையாள்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரப்பெற்ற பல்வேறு ஆய்வுத் திட்டங்களில் சிறந்த 100 திட்டங்களை கூகுள் நிறுவனம் தேர்வு செய்திருந்தது. அதில் ரமேஷின் கண்டுபிடிப்பு உள்பட 14 திட்டங்கள், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.