2016-07-13 15:54:00

இரயில் விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


ஜூலை,13,2016. இத்தாலியின் தெற்கே Puglia எனும் பகுதியில் நிகழ்ந்த இரயில் விபத்தில் இறந்தோர், மற்றும் காயமுற்றோருடன் தன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ளார்.

Bari-Bitonto உயர் மறைமாவட்டப் பேராயர் Cacucci Francesco அவர்களுக்கு திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்தியில், இறந்தோருக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்பதாகவும், காயமுற்றோர் விரைவில் குணம் பெற செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஜூலை 12, இச்செவ்வாய் காலை 11.30 மணியளவில் ஒரே இரயில் பாதையில் ஓடிக்கொண்டிருந்த இரு இரயில் வண்டிகள்  நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.