2016-07-13 16:12:00

அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவரின் பாராட்டு


ஜூலை,13,2016. தொடர்பு சாதன உலகின் நடைமுறைகள் குறித்து தெளிவான அறிவும், கத்தோலிக்கத் திருஅவை மீது ஆழ்ந்த அன்பும் கொண்டவர், அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி என்று, அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் Joseph Kurtz அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக, திருப்பீடச் செய்தித் தொடர்பாளராகவும், இன்னும் வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி மையம் ஆகியவற்றின் இயக்குனராகவும் பணியாற்றிவந்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், இம்மாத இறுதியில் பணிஓய்வு பெறும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பேராயர் Kurtz அவர்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், அருள்பணி லொம்பார்தி அவர்கள் பணியாற்றிய திறமையை நேரில் கண்டு தான் வியந்ததாகக் கூறிய பேராயர் Kurtz அவர்கள், இறைவன் அவருக்கு நல்ல உடல்நலத்தை வழங்க தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அருள்பணி லொம்பார்தியின் பொறுப்பை ஏற்கும், Greg Burke அவர்களுக்கும், உதவி இயக்குனர் Paloma García Ovejero அவர்களுக்கும் பேராயர் Kurtz அவர்கள், தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அருள்பணி லொம்பார்தி அவர்கள் பணி ஓய்வு பெறும் செய்தி வெளியானது முதல், உலகின் பல்வேறு தொடர்பு சாதன நிறுவனங்கள், அவருக்கு தங்கள் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.