2016-07-11 15:56:00

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்திற்கு புதிய தலைவர் நியமனம்


ஜூலை,11,2016. திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசுசபை அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்களின் விருப்பப்பணி ஓய்வை ஏற்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய செய்தித் தொடர்பாளரை நியமித்துள்ளார்.

திருப்பீடச் செய்தித்தொடர்பகத்தின் துணத் தலைவராக பணியாற்றி, தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டவரான Greg Burke என்பவர், ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் புதிய துணைத்தலைவராக இஸ்பானிய நாட்டைச் சேர்ந்த Paloma García Ovejero என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தன் பணி ஓய்வு விருப்பத்தை வெளியிட்டு, இம்மாதம் இறுதி நாளில் ஓய்வு பெற உள்ள இயேசு சபை அருள்பணி லொம்பார்தி அவர்கள், 2006ம் ஆண்டு ஜூலை 11 முதல் இப்பதவியை வகித்து வந்துள்ளார்.

1991 ம் ஆண்டு முதல் வத்திக்கான் வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளராகவும், 2005 முதல் அதன் பொது இயக்குனராகவும் பதவியேற்று, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருப்பீட செய்தித் தொடர்பாளராகவும் சரியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

1973ம் ஆண்டு, “Civiltà Cattolica” என்ற கத்தோலிக்க இதழின் ஆசிரியர் குழுவிலும், பின்னர், அக்குழுவின் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், 1984ம் ஆண்டு முதல், ஆறு ஆண்டுகள், இத்தாலிய இயேசு சபை மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

வத்திக்கான் வானொலியின் பொது இயக்குநராகப் பணியாற்றிய அதே வேளையில், 2001ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டு முடிய, வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் இயக்குனராகவும் பொறுப்பேற்று செயலாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.