ஜூலை,11,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி முடிய ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
செப்டம்பர் 30ம் தேதி காலை 9 மணிக்கு உரோம் நகரிலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலையே ஜார்ஜியாவில் அரசுத்தலைவரையும் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்களையும் சந்திப்பார்.
அக்டோபர் முதல் தேதி அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாரைச் சந்திக்கும் திருத்தந்தை, Meskhi பொது வளாகத்தில் விசுவாசிகளுக்கான திருப்பலியையும் நிறைவேற்றுவார்.
2ம் தேதி காலை, ஜார்ஜியாவிலிருந்து விடைபெற்று, அசர்பைஜான் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள சலேசிய சபையினரின் ஆலயத்தில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றியபின், இஸ்லாமியத் தலைவர், ஆர்த்தடாக்ஸ் ஆயர், அப்பகுதி யூத குரு ஆகியோரை தனித்தனியே சந்தித்து உரையாடுவார். பின்னர் 2ம் தேதி இரவே அந்நாட்டிலிருந்து விடைபெற்று உரோம் நோக்கி புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |