2016-07-07 16:01:00

சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்


ஜூலை,07,2016. சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது.

திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில், கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும், கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.

பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பொருட்களாக, பழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, உரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சங்ககாலத்தில், இந்த இடம், உரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு வர்த்தக மையமாக இருந்திருக்கக்கூடும் என்பதை, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.