2016-07-07 15:45:00

உங்களுக்காகச் செபிப்பதை நிறுத்தவில்லை –திருத்தந்தை டுவிட்டர்


ஜூலை,07,2016. "இம்மாதம் பொது சந்திப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், நான் உங்களுக்காகச் செபிப்பதை நிறுத்தவில்லை. அதேபோல், நீங்களும் தொடர்ந்து எனக்காக செபியுங்கள்" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 7, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், ஜூலை 15ம் தேதி முதல், 18ம் தேதி முடிய இத்தாலியின் ஜெனோவா நகரில் நடைபெறும் 26வது இத்தாலிய தேசிய திருநற்கருணை மாநாட்டை, திருத்தந்தையின் சார்பில் தலைமையேற்று நடத்த, கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்க்கோ (Angelo Bagnasco) அவர்களை திருத்தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

"திருஅவையின் வாழும் ஊற்றாகவும், எதிர்கால மகிமையின் தவறா உறுதியாகவும் விளங்கும் நற்கருணை" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த நற்கருணை மாநாட்டிற்கு, ஜெனோவா பெருநகரின் பேராயரும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் பஞ்ஞாஸ்க்கோ அவர்களை தன் சார்பில் தலைமையேற்குமாறு திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதம், இவ்வியாழனன்று வெளியானது.

மிகவும் பரிசுத்த திருநற்கருணை, கோவிலில் பூட்டி வைக்கப்படாமல், மிகக் கடினமானச் சூழல்களில் வாழும் மக்களைச் சென்றடைய, இந்த நற்கருணை மாநாடு வழி வகுப்பதாக என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.