2016-07-05 16:29:00

குணப்படுத்தல், ஒப்புரவு இன்றி அமைதியை எட்ட முடியாது


ஜூலை,05,2016. இஸ்ரேலும் பாலஸ்தீனாவும், உலக சமுதாயத்தின் வலுவான ஆதரவுடன், நேரிடையாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே, இவ்விரு தரப்பும் அமைதி நடவடிக்கைகளில் முன்னேற்ற முடியும் என்று திருப்பீடம் நம்புவதாக, திருஅவை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிக்கு ஆதரவாக நடைபெற்ற ஐ.நா.வின் பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič அவர்கள் இவ்வாறு   கூறினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுபோல், இரு நாடுகள் தீர்வுக்கு, திருப்பீடம் ஆதரவளிக்கின்றது என்பதை மீண்டும் தெரிவிப்பதாகக் கூறினார் பேராயர் Jurkovič.

அமைதியைக் கொணரும் எல்லா நடவடிக்கைகளிலும் பேச்சுவார்த்தைகள் எவ்வளவுதான் இன்றியமையாதவைகளாக இருந்தாலும், இந்நடவடிக்கைகள், இந்தப் பேச்சுவார்த்தைகளை மட்டும் சார்ந்து இல்லை என்பதை திருப்பீடம் நம்புகின்றது என்றும் உரைத்தார் பேராயர் Jurkovič.

குணப்படுத்தல், ஒப்புரவு, தனிப்பட்ட மற்றும் சமூக நிலைகளில் ஒருவரையொருவர் அங்கீகரித்தல், மதித்தல் ஆகியவை, அரசியல் தீர்வுகளுடன் இணைந்து செல்லாவிடில்,  அமைதியை எட்ட முடியாது எனவும் கூறிய பேராயர் Jurkovič அவர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவின் அமைதி நடவடிக்கைகளில் மதங்களும், மதத்தினரும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.